onsdag 21. februar 2018

புத்தர்



புத்தர்
புத்தர் பனிரெண்டு வருடங்கள் கழித்து அவர் தனது அரண்மனைக்கு வருகிறார்.
தந்தை மிக மிககோபமாக இருப்பார் என்பது அவருக்கு மிக நன்றாக தெரியும்.
தந்தைக்கு மிகவும்வயதானபின் பிறந்த மகன், ஒரே மகன்,தந்தையின் நம்பிக்கைகள் எல்லாம்இவரைசார்ந்துதான் இருந்தது.
அவர் மிகவும் சக்தியிழந்து போய் விட்டார், ஓய்வெடுக்கவிரும்பினார்.
தனது மகன் ராஜீய பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளவதற்காககாத்திருந்தார்.
அதற்கு முன்னதாக கௌதம புத்தர் அரண்மனையிலிருந்து சென்றுவிட்டார்.
இந்த கதையில் மனித மனம் மிக அழகாக வெளிப்பட்டிருக்கும்.
கௌதம புத்தர்கிளம்புவதற்கு முன்தினம்தான் அவருக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது.
தனது வாரிசை,தனது துணைவிக்கும் தனக்கும் உள்ள அன்பின் வெளிப்பாட்டை, கிளம்புவதற்குமுன் ஒருமுறைகாண விரும்பினார். அதனால் அவர் தனது மனைவியின் அறைக்கு சென்றார். அவள் தூங்கிக்கொண்டிருந்தாள், குழந்தை போர்வைக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. அவர்போர்வையை விலக்கி குழந்தையின் முகத்தை ஒரு முறை காண நினைத்தார். ஏனெனில் அவர்திரும்ப வராமலும் போகலாம்.
அவர் புரிபடாத யாத்திரைக்குச் செல்கிறார். அவருக்கு என்ன நடக்கும் என்றுஅவருக்கே தெரியாது.
அவர் தனது நாடு, மனைவி, குழந்தை, தன்னை, எல்லாவற்றையும்ஞானவிழிப்படைய பணயம் வைக்கிறார்.
அதற்காகவே அலைந்து திரிந்து ஞானமடைந்த வெகுசிலரிடமிருந்து கேள்விப்பட்ட ஒரு சாத்தியக்கூறாக மட்டுமே உள்ள ஒன்றை தேடிசெல்கிறார்.
உங்களைப் போலவே அவருக்கும் ஏகப்பட்ட குழப்பங்கள், கேள்விகள். ஆயினும் ஒரு முறைமுடிவு பெற்று விட்டால்……. அவர் மரணத்தை, முதுமையை, நோயை, பார்த்த அந்த நாள்,அவர் தனது வாழ்வில் முதன்முறையாக ஒரு சந்நியாசியை பார்த்த அந்த நாள்…… அவருள்,“மரணம் உறுதி எனும்போது பின் அரண்மனையில் காலத்தை செலவிடுவதுஆபத்தானது.
மரணம்வருவதற்கு முன் இறப்பை கடந்தும்இருப்பதை கண்டடைந்தேயாக வேண்டும்”. என்ற இறுதி நிலைப்பாட்டுக்கான கேள்வி எழுந்தது.அவர் செல்ல முடிவெடுத்துவிட்டார்.
ஆனாலும் மனித மனம், மனித இயல்பு…… தனதுகுழந்தையின் முகத்தை ஒரு முறை பார்க்க விரும்பினார் – அவர் இன்னும் குழந்தையை பார்க்கவேயில்லை.
ஆனால் போர்வையை விலக்கும்போது யசோதரா – அவரது மனைவி – விழித்துவிட்டால், அவள் எழுந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அவள் எழுந்துவிட்டால், “இந்தஇரவில் என் அறையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள், நீங்கள் எங்கோ செல்ல தயாராகிஇருப்பதுபோல தோன்றுகிறதே?” எனக்கேட்பாள்.
தேர் வாசலில் தயாராக இருக்கிறது,எல்லாமும் ரெடி, அவர் கிளம்ப வேண்டியதுதான்பாக்கி. அவர் தனது தேரோட்டியிடம், “ஒரு நிமிடம் பொறு, நான் எனது குழந்தையின் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன். ஏனெனில் நான் திரும்ப வராமலும் போகலாம்”. என்று கூறியிருந்தார்.
ஆனால் அவர் தனது குழந்தையின் முகத்தை பார்க்கவில்லை, ஏனெனில் யசோதரா எழுந்துஅழுது, நீங்கள் என்ன செய்கிறீர்கள்?, எதற்கு இந்த துறவறம்?,நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?, ஞானமடைதல் என்பது என்ன?என்று கதற தொடங்கிவிட்டால்…. என்று பயப்பட்டார்.
ஒரு பெண்ணைப் பற்றி யாருக்கும்ஒன்றும் தெரியாது – அவள் முழு அரண்மனையையும் விழிக்க வைத்துவிடக் கூடும்.
தந்தைவந்துவிடுவார், எல்லாமும் முடிந்துவிடும். அதனால் அவர் நழுவி சென்றுவிட்டார்.
பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு, ஞானமடைந்தபின் அவர் செய்தமுதல் வேலை,தந்தையிடம், மனவியிடம், பனிரெண்டு வயதடைந்த மகனிடம் மன்னிப்பு கேட்க திரும்பிவந்ததுதான்.
அவர்கள் கோபமாக இருப்பார்கள் என்பதை அவர் அறிவார்.
தந்தை மிகவும்ஆத்திரமாக இருந்தார். புத்தரை பார்த்தவுடன், அரைமணி நேரம் திட்டி தீர்த்தார்.
பின்திடீரென தான் கூறிய எந்த விஷயமும் தன் மகனை தொடவில்லை, அவன் ஒரு பளிங்குச்சிலை போலநிற்கிறான் என்பதை உணர்ந்தார்.
தந்தை தன்னை கவனித்தவுடன் புத்தர், “இதைத்தான் நான் விரும்பினேன். கண்ணீரை துடைத்துக்கொள்ளுங்கள். என்னைப் பாருங்கள். அரண்மனையை விட்டு சென்றபோது இருந்தவன் அல்ல நான்.உங்களது மகன் முன்னரே இறந்து விட்டான். நான் தோற்றத்தில் உங்களது மகன்போலஇருக்கலாம். ஆனால் எனது இருப்பு மிகவும் வேறுபட்டது. என்னைப் பாருங்கள்”. என்றார்.
“நான் பார்த்துக் கொண்டிருந்தேன், அரைமணி நேரம் நான் உன்னைத் திட்டிக் கொண்டிருந்தேன்,நீ எதுவுமே பேசவில்லை. நீ எவ்வளவு ஆத்திரக்காரன் என்று எனக்குத் தெரியும். உன்னால்அமைதியாக இருந்திருக்க முடியாது. இப்படி அமைதியாக இருந்தவிதமே நீ மாறிவிட்டாய்என்பதை காட்டுகிறது. உனக்கு என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டார்.
புத்தர், “சொல்கிறேன். அதற்குமுன் நான் போய் என் மனைவியையும் மகனையும் பார்த்துவிட்டு வருகிறேன்.
நான்வந்திருக்கிறேன் என்பதை அவர்கள்கேள்விப்பட்டிருப்பார்கள். அவர்கள் எனக்காக காத்திருப்பார்கள்.”என்றார்.
அவரை பார்த்தவுடன் அவர் மனைவி, “நீங்கள் மாறியிருப்பதை என்னால்பார்க்க முடிகிறது. இந்த பனிரெண்டு வருடங்கள் மிகவும் துன்பமான காலங்கள். நீங்கள் சென்று விட்டதல்ல காரணம், நீங்கள் என்னிடம் எதுவும் சொல்லாமல் சென்றதே காரணம். நான் உண்மையை தேட செல்கிறேன் என என்னிடம் கூறியிருந்தால் நான் உங்களை தடுத்து நிறுத்தியிருப்பேன் என நினைத்தீர்களா? நீங்கள் என்னை கேவலப் படுத்தி விட்டீர்கள். இந்த பனிரெண்டு வருடங்களும் என்னை வருத்திய விஷயம் இதுதான்.
நீங்கள் உண்மையை தேட சென்றது வருத்தப்பட வைக்க வில்லை,அது சந்தோஷமான விஷயம்தான். நீங்கள் ஞானத்தை தேடி சென்றது குற்றமல்ல. நான் உங்களை தடுத்து நிறுத்தியிருக்க மாட்டேன். நானும் ஷத்திரிய குலத்தை சேர்ந்தவள்தான். கத்தி கதறி அழுது உங்களை தடுக்கும் அளவு பலவீனமானவளாகவா என்னை நினைத்தீர்கள்?,நீங்கள் என்னை நம்பவில்லையே என்பதுதான் இந்த பனிரெண்டு வருடங்களும் என்னைவேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
நான் நீங்கள் செல்ல அனுமதித்திருப்பேன், நான்உங்களுக்கு விடை கொடுத்திருப்பேன், தேர் வரை வந்து வழியனுப்பி வைத்திருப்பேன்.நீங்கள் அடைந்திருப்பது எதுவோ அதை இங்கிருந்தே அடைந்திருக்க முடியாதா என்பதுதான்இந்த பனிரெண்டு வருடங்களும் உங்களை நான் கேட்க துடித்துக் கொண்டிருந்த கேள்வி.
நீங்கள் எதையோ அடைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது……..இந்த அரண்மனையிலிருந்த சென்ற நபர் அல்ல நீங்கள். நீங்கள் வேறுவிதமாகஜொலிக்கிறீர்கள், உங்களது இருப்பு முற்றிலும் புதிதாக, புத்துணர்வோடு இருக்கிறது.உங்களது கண்கள் மேகமற்ற வானம் போல தெளிவாகவும் தூய்மையாகவும் இருக்கிறது. நீங்கள்மிகவும் அழகாக இருக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் அழகுதான், ஆனால் இந்த அழகுபுறஅழகல்ல, அகஅழகு உங்களுக்குள் பூத்திருக்கிறது.
உங்களுக்கு கிடைத்தது என்னவோ அதுஇங்கே நீங்கள் இருந்தால் கிடைத்திருக்காதா? இந்த அரண்மனைநீங்கள் ஞானம் பெறுவதை தடுத்து நிறுத்தி விடுமா?” என்று கேட்டாள்.
இது மிக புத்திசாலித்தனமான கேள்வி.
இதை கௌதம புத்தர் ஏற்றுக் கொள்ள வேண்டிவந்தது. “நான் இங்கிருந்தே அடைந்திருக்கலாம். ஆனால் அப்போது எனக்கு எதுவும் தெரியாது.
இப்போதுஎன்னால் ‘இங்கிருந்தே அடைய முடியும், எந்த மலைகளுக்கும் செல்ல வேண்டியதில்லை, எங்கேயும் செல்லவேண்டியதில்லை’ என சொல்ல முடியும். நான் என்னுள் சென்றாலே போதும், நான் எங்கே இருந்தாலும் அதுநிகழும். வெளியே வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. இந்த அரண்மனையும் மற்றஇடங்களைப் போன்றதே.
ஆனால் என்னால் இதை இப்போது சொல்ல முடியும், அப்போது இதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே.நான் உன்னைப் பற்றியோ உன் தைரியத்தைப் பற்றியோ சந்தேகபடவில்லை. உண்மையில் நான்என்னைப் பற்றித்தான் சந்தேகப்பட்டேன். அதனால் என்னை மன்னித்துவிடு.
நீஎழுந்துவிட்டாலோ, நம் குழந்தையை நான் பார்த்துவிட்டாலோ, “நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்?,என்னுடைய அழகான மனைவியை, இந்த முழுமையான அன்பை, என்னிடம் அவள் கொண்டிருக்கும்முழுமையான அர்ப்பணிப்பை விட்டு விலகுவதா?, இந்த ஒரு நாளே ஆன குழந்தை என்ன செய்தது?,நான் அவனை விட்டு போகிறேன் என்றால் ஏன் இவனை பெற்றெடுத்தேன்?, நான் என்னுடைய பொறுப்புகளிலிருந்து தப்பிப் போவதா? என்று நான் யோசிக்க ஆரம்பித்து விடுவேன்.
என்னுடைய தந்தை விழித்துக் கொண்டு விட்டாலோ என்னால் போகவே முடியாது. நான்உன்னை நம்பவில்லை என்பதல்ல, நான்என்னைத்தான் நம்பவில்லை. நான் முழுமையாகதுறக்கவில்லை, அங்கு ஒரு அலைபாய்தல் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். என்னுள்ஒரு பாகம், ‘ஏய், நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?என்றது. மற்றொரு பாகம், ‘செல்வதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம், இதை நீ விட்டுவிட்டால் போவது மேலும் மேலும் கடினமானதாகி விடும். உனக்கு முடி சூட்டுவதற்கு உனது தந்தை ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார். முடி சூட்டிக் கொண்டு அரசனாகி விட்டால் பின் செல்வது மிகவும்கடினம்’. என்றது.” என்று கூறினார்.
யசோதரா, “நான் உங்களிடம் கேட்க நினைத்த ஒரே ஒரு கேள்வி இதுதான்.அதை எங்கிருந்தாலும் அடைய முடியும், இங்கிருந்தாலும் அடைந்திருக்க கூடும் என நீங்கள்கூறிய பதிலின் உண்மை தன்மையில்என் உள்ளம் குளிர்ந்தது.
இதோ உங்கள் மகன், இவன் உங்களைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம் நான், “பொறு, அவர் திரும்பி வருவார். அவரால் மனிததன்மையற்று, கருணையின்றி, கொடூரமாக நடந்து கொள்ள முடியாது. ஒரு நாள் அவர் திரும்பி வருவார். அவர் எதை உணர சென்றிருக்கிறாரோ அதற்கு நாள் பிடிக்கும். ஆனால் அதை உணர்ந்த உடனே அவர் செய்யும் முதல் விஷயம் இங்கே திரும்பி வருவதுதான்.” என பதில் கூறுவேன்.
உங்களது மகனுக்கு நீங்கள் தரப் போகும் சொத்து என்ன?, அவனுக்குத்தர நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள்?, அவனுக்குஉயிர் கொடுத்திருக்கிறீர்கள், வேறு என்ன அவனுக்கு கொடுக்கப்போகிறீர்கள்?”என்று கேட்டாள்.புத்தரிடம் பிச்சைப் பாத்திரத்தை தவிர வேறு எதுவும் இல்லை. அவர் தனது மகனை –அவன் பெயர் ராகுல். ஏன் அவன் பெயர் ராகுல் என்பதை நான் பிறகு சொல்கிறேன் அந்தபெயர் கௌதம புத்தர் அவனுக்கு கொடுத்தது – அருகில் அழைத்தார்.
ராகுலை அருகில் அழைத்து பிச்சைப் பாத்திரத்தை அவன் கையில் கொடுத்தார். “என்னிடம் வேறு எதுவும் இல்லை. இதுதான் என்னிடமுள்ள ஒரே விஷயம். இனிமேல் நான்என் கைகளையே பிச்சைப் பாத்திரமாக உபயோகப் படுத்தி பிச்சை எடுத்துக் கொள்வேன். இந்தபிச்சைப் பாத்திரத்தை உனக்கு கொடுத்ததன் மூலமாக நான் உனக்கு சந்நியாசம்கொடுத்துவிட்டேன். நான் கண்டறிந்த மிகப் பெரிய அரிதான விஷயம் இதுதான். நீயும் இதைகண்டறிய வேண்டும் என நான் விரும்புகிறேன்.” என்றார்.
அவர் தனது மனைவியிடம், “நீயும் எனது சந்நியாசிகளின் கூட்டத்தில் ஒரு பாகமாக தயாராகு,” என்றார். தனது மனைவிக்கும் தீட்சையளித்தார். புத்தரின் தந்தை வந்துஇவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். “ஏன் என்னை மட்டும் விட்டு விட்டாய்?,நீ கண்டறிந்ததை உன் வயதான தந்தையுடன் பகிர்ந்து கொள்ள உனக்கு விருப்பமில்லையா?, என்னுடைய மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது…… எனக்கும் தீட்சை கொடு” என்று அவர் கேட்டார்.புத்தர், “உங்கள் எல்லோரையும் என்னுடன் கூட்டிச் செல்லத்தான் நான் இங்கு வந்தேன்.
ஏனெனில் அழியாத,யாராலும் பறித்துக் கொள்ள முடியாத, முற்றிலும் பெரியதான சாம்ராஜ்யத்தை நான்அறிந்தேன். நான் இங்கே வந்தால் என்னுடைய இருப்பை, என்னுடைய தெளிவை, உங்களால் உணரமுடியும் என்றே நான் இங்கே வந்தேன். என்னை பின் தொடர்ந்து வாருங்கள் என நான்உங்களை அழைக்க முடியும்.” எனக் கூறி அவர்கள் மூவருக்கும் தீட்சையளித்தார்.
இந்திய புராணங்களில் சந்திர கிரகணம் என்பது சந்திரனுக்கு உள்ள இரண்டுஎதிரிகளான ராகுவும் கேதுவும் சந்திரனை பிடித்து கொல்ல முயற்சி செய்கின்றனர்.ஒவ்வொரு முறையும் சந்திரன் அவர்கள் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்கிறான். என்பதைதான் சந்திரகிரகணம் என்று கூறப்படுகிறது.
கௌதம புத்தர், “இந்த மகன்தான் எனக்கு மிகப் பெரும் தடையாக இருக்கப் போகிறான், இவன்தான் என்னுடைய எதிரியாக இருக்கப் போகிறான், இமயமலைக்கு நான் செல்வதை தடுக்கப் போவது இவன்தான். இவன்மேல் நான் வைக்கும் அன்பு, இவனுடன் நான் கொண்டுள்ள நேசம், பாசம். இவைதான்என்னுடைய விலங்குகளாக இருக்கப் போகின்றன.” என்று நினைத்ததால் அவர் தன் மகனுக்கு ராகுல் என பெயர் வைத்தார்.
அவர்கள் எல்லா சந்நியாசிகளும் தங்கியிருந்த, ஊரை விட்டு வெளியேதள்ளியுள்ளகாட்டுக்கு வந்தனர். அன்று மாலை அவர் சந்நியாசிகளிடையே உரை நிகழ்த்துகையில், “எனது மனைவி யசோதரா என்னை ஒரு கேள்வி கேட்டாள். அது மிக முக்கியத்துவம் வாய்ந்தகேள்வி.
ஒரு அரசராக வாழ்ந்து கொண்டே ஞானம் பெறுவது சாத்தியமில்லையா என்றுகேட்டாள். ‘இடத்தைப் பற்றியோ, நேரத்தைப் பற்றியோ கேள்வியே கிடையாது. ஒருவர் எங்கேயிருந்தாலும் சரி ஞானம் பெற முடியும் – ஆனால் அந்த நேரம் இதை சொல்வதற்கு எனக்கு யாருமில்லை.
எங்கேஇதை பெற முடியும், யாரிடம் இதை கேட்பது, எங்கே போவது என்று எனக்கு எந்த யோசனையும்இல்லை. நான் அறியாததற்க்குள் குதித்து விட்டேன்.’ என்று உண்மையை கூறினேன்.
ஆனால் இப்போது, நீ எங்கே இருந்தாலும் கவனத்தோடும் விழிப்போடும் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் பணயம் வைக்க கூடிய தைரியம் உன்னிடம் இருக்குமானால் ஞானமடைதல் நிகழும் என்று என்னால் கூற முடியும்.” என்றார்.
ஓஷோ
*******&******

lørdag 3. februar 2018

கிறிஸ்தவமும் அறிவியலும்!

கிறிஸ்தவமும் அறிவியலும்! பேசாலைதாஸ் B.A (Hones) M.A dip London.

(தேன் என்ற வலைப்பதிவில் வெளிவந்த இந்த கட்டுரை சில திருத்தங்களுடன் எழுதப்படுகின்றது.)
                                                     கிறிஸ்தவ இறையியல், கிரேக்க தத்துவத்தில் இருந்து கட்டப்பட்டது என்றால் அது மிகையாகாது!. பைபிள் தீர்க்கமான அறிவியல் எதையும் முன்வைக்கவில்லை.  மாறக கிறிஸ்தவம் பிற்போ க்கானது, அறிவியலுக்கு எதிரானது என்று வாதிடப்பட்டது. கிறிஸ்தவ மதத்தின் பெரும் பிரிவான கத்தோலிக்கத்துக்கு எதிராக, புரட்டஸ்தாந்து பிரிவினர் கடும் தாக்கத்தையும், இஸ்லாமியரின் வளர்ச்சிக்கு எதிராக, புதிய அறிவியல் கோட்பாடுகளுக்கு தடை போடவேண்டிய சூழல் அதற்கு இருந்தபடியால், அறிவியல் கோட்பாடுகளை எதிர்க்கவேண்டியதாயி ற்று, இருந்தபொதும், விவிலியத்தின் கதைகளிலிருந்தும் பாடல்கள்/கவிதைகளிலிருந்தும் எடுக்கப்பட்ட வரிகளிலிருந்து, அவை அரிஸ்டா ட்டிலின் அறிவியலுடன் இயைந்தவையாக இருந்தமையால், புவிமையக் கொள்கை (Geocentirc Model) கிறீத்துவ அறிவியல் கொள்கையாக உருவா க்கப்பட்டது. அந்த காலத்துக்கு அது பெரும் புரட்சிகர கோட்பாடாக இருந்தது. அன்றைய அறிவியலையும் பொது நம்பிக்கைகளையும் மத நம்பிக்கைகளையும் அது புரட்டிப்போட்டது. .

                                        கிறீத்துவத்தின் ஆரம்ப காலத்திலேயே அது அன்றைய அறிவியக்கத்தின் உச்சகட்ட கோட்பாடுகளை உள்வாங்கிக்கொண்டது. பிளேட்டோவும் அரிஸ்டாட்டிலும் அதன் அறிவுச்செயல்பாட்டின் பிரதான ஆதாரங்களாகினர். அலெக்ஸாண்ட்ரியாவின் கிளெமென்ட் , துவங்கி ,அகஸ்டின் , தாமஸ் அக்குவினாஸ்  போன்றவர்கள் கிரேக்க தத்துவ த்தின் மீது கிறீத்துவ இறையியல் உருவாக்கினார்கள்.. கிரேக்க தத்துவ த்தையும் இலக்கியத்தையும் ஏற்பதிலும் மறுப்பதிலும் வெவ்வேறு போ ப்புகளுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. சிலர் கிரேக்க இலக்கிய புத்தகங்களை நூலகங்களிலிருந்து அகற்றினர். ஆயினும் கிரேக்க இல க்கியத்தையும் தத்துவத்தையும் நவீன மேற்குக்கு கொண்டு சேர்த்ததில் கிறீத்துவம் முதன்மையான இடத்தை பெறுகிறது.

                                                                                இன்றுவரைக்கும் மேற்கின் தத்துவம் கிரேக்க தத்துவத்தின் நீட்சியாகவே அடையாளம்காணப்படுகிறது. மேற்குலகில் கிறீத்துவம் அக்காலங்களில் மிக முக்கிய, கிட்டத்தட்ட ஒரே, அறிவியக்கமாக இருந்துவந்தது. . சூரிய மைய வானியல் கொள்கையை (Heliocentrism) முன்வைத்த கோப்பர்நிக்கஸ் ஒரு கத்தோலிக்க மதப்ப ணியாளர். அவரின் கோட்பாடு கிறிஸ்தவத்திற்கு, பெரும் சவாலாக் மாறியது.  அதற்காக, கத்தோலிக்க சபை, இவர் விதிமீது  தீர்ப்பெழுதி யது. இவரது கோட்பாட்டை ஆதரித்த, கோபர்நிகஸ் மற்றும்
ஜியாடர்டொனோ புரூனோ, கோப்பர்நிக்கஸின், பல அடிப்படையான கத்தோலிக்க நம்பிக்கைகளையும் கடுமையாக விமர்சித்தார், மறுத்தார். ஏற்கனவே பிரிவினையின் மத்தியில் பதட்டமடைந்திருந்த கத்தோலிக்க த்தின் ‘இன்குயிசிஷனின்’ கரங்களில் சிக்கி இவர்கள்  சிதையேற்ற ப்பட்டனர். 
                                                           இதுபோலவே. கலிலேயோ ஒரு அற்புதமான அறிவியல் வல்லுனார்  ஆரம்பத்திலிருந்தே அவருக்குப் பல எதிரிகள். அவர் அரிஸ்டாட்டிலின் அறிவியல் கொள்கைகள் பலவற்றையும் நிரா கரித்தார். அரிஸ்டாட்டிலை பின்பற்றிய அறிஞர்களுடன் நேரடியாக மோதினார். மிகப் புகழ்பெற்ற பைசா நகரக் கோபுர பரிசோதனையை செய்து கனமான பொருட்கள் பூமியை நோக்கி விரைவாகச் செல்கி ன்றன எனும் அரிஸ்டாட்டிலின் கொள்கையை பொய்யாக்கினார். அதை மறுத்த அறிஞர்களை எள்ளி நகையாடினார்.. கலிலியோ கோப்பர்நி கஸின் கொள்கையை ஆதரித்தார். சூரிய மையக் கொள்கையும் கலிலேயோ அதற்கு ஆதரவாக முன்வைத்த வாதங்களும் அன்றைய அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படாததாய் இருந்தது. அதற்கு கலிலேயோவின் தனிப்பட்ட ஆளுமையும் ஒரு காரணமாய் இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். அவரது கருத்துக்களை மறுத்தவர்கள் எவரும் எளிதில் அவரது எதிரியிகளாயினர். கத்தோலிக்கம் அன்றைய அறிவியக்கத்தின் மையத்தில் இருந்தது என்பதற்கு ‘கலிலேயோ விவகாரம்’ ஒரு ஆதாரம்.
                                                                                கடந்த நூற்றாண்டில் போப் இரண்டாம் அருள் சின்னப்பர் சிலுவைப்போர்கள், அடிமை வியாபாரம், யூத இன அழிப்பு போன்ற கத்தோலிக்கத்தின் பல்வேறு வரலாற்றுப் பிழைகளுக்கும் பல தருணங்களில் வெளிப்படையாய் வருத்தம் தெரிவித்துள்ளார். அவற்றில் முக்கியமானது கலிலேயோவிற்கு கிறீத்துவம் வழங்கிய தீர்ப்புக்கானது. கத்தோலிக்க கிறீத்துவமும், பாரம்பரிய பிரிவினை கிறீத்துவ சபைகளும் பைபிளை அறிவியல் நூலாக பாவிப்பதையும் அதிலுள்ள எல்லாவற்றையும் நேரடிப் பொருள் கொள்வதையும் பல நூற்றாண்டுகளாக கைவிட்டுவிட்டன. இதற்கான விதைகள் ஆரம்பகால இறையியலர்களான அகஸ்டினிடமிருந்தும், அக்குவினாஸிடமிருந்தும் பெறப்பட்டன எனபதுவும் குறிப்பிடத் தகுந்தது.

                                                                         நவீன மரபணுவியலை உருவாக்கிய கிரெகர் மென்டேல் (Gregor Mendel) ஒரு கத்தோலிக்க பாதிரியார். அறிவுச்செயல்பாட்டிற்கு புகழ்பெற்ற பிர்னோ(Brno) ஆசிரமத்தில் வளர்ந்த பீன்ஸ் செடிகளை ஆராய்ந்து அவர் மரபணு கோட்பாடுகளை உருவாக்கினார் சார்லஸ் டார்வின் இவரது ஆய்வைக் குறித்து அறிந்திருந்தார் என்பது பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

                                                நிக்கோலஸ் ஸ்டெனோ (Nicolas Steno) எனும் பிஷப் புவியமைப்பியலை (Geology ) உருவாக்கினார். பெல்ஜியத்தை சார்ந்த பாதிரியார் ஜியார்ஜ் லெமாத்ர் (Georges Lemaître ) நவீன வானியற்பியலின் முக்கிய கோட்பாடான ‘பெரும்வெடிப்பை’ (Big Bang) முதன் முதலில் முன்வைத்தவர். இயேசுசபை பாதிரியார்கள் (Jesuits) தொடர்ந்து பல அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்துவந்தனர். ஐசக் நியூட்டன் தன்னுடன் தனிப்பட்ட தொடர்புகளில் முக்கியமானவர்களாக இயேசுசபை பாதிரியார்களை குறிப்பிடுகிறார். 

                                                                    நிலநடுக்கம் குறித்த அறிவியல் (Seismology) இயேசு சபை அறிவியல் (The Jesuit science) என அழைக்கப்படுகிறது. லாஸரோ ஸ்பலன்ஸனி (Lazzaro Spallanzani) எனும் பாதிரியாரின் மனித உடல் செயல்பாடுகள் குறித்த கண்டுபிடிப்புகள் லூயிஸ் பாஸ்டியரின் (Louis Pasteur)புகழ்பெற்ற உயிரியல் கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டன. பல நூற்றுக்கணக்கான அறிவியல் வல்லுநர்கள் கிறீத்துவத்தின் நான்கு சுவர்களுக்குள்ளிருந்தும் வெளியே பொதுக் கிறீத்துவர்களிடமிருந்தும் உருவாகி வந்துள்ளனர்.  இவர்களில் பலரும் கிறீத்துவத்திடமிருந்து நேரடியாக நிதியும், ஆதரவும் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது. 
                                                                இந்த அறிவியல் இயக்கத்தின் நீட்சியாக இந்தியாவில் யூஜின் லெஃபான்ட் (Eugene Lafont) எனும் இயேசுசபை பாதிரியார் 1869ல் அறிவியல் வளர்ச்சிக்கான இந்திய கூட்டமைப்பை மகேந்திரலால் சர்க்காருடன் இணைந்து துவங்கினார். அவரது அறிவியல் உரைகள் இந்திய இளைஞர்கள் பலரையும் அறிவியலின் மின்னீர்ப்புக்குள் இழுத்துவந்தது. இந்தியாவின் பெருமைக்குரிய அறிவியல் அறிஞர்களான சர் சி.வி இராமன், கெ. எஸ் கிருஷ்ணன் மற்றும் ஜகதீஷ் சந்திரபோஸ் போன்றொர் தந்தை. லெஃபாண்டின் மாணவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்திய நவீன அறிவியல் இயக்கத்தின் உச்சம் அதுவாகத்தான் இருந்திருக்கும்.

                                             யோசித்துப் பார்த்தால் கலிலேயோ தீர்ப்பைப் போன்றதொரு வேறொரு பிழையை கத்தோலிக்கம் செய்ததாக நாம் வரலாற்றில் காணவில்லை. இரண்டாயிரம் வருடப் பாரம்பரியம் கொண்ட ஒரு அமைப்பு அது நானூறு வருடங்களுக்கு முன்பு செய்த ஒரு தவற்றிற்காக இன்றும் தீர்ப்பிடப்படுகிறது. கலிலேயோவிற்கு 200ஆண்டு களுக்குப் பின் கிறீத்துவம் வரலாற்றின் வேறொரு சவாலை சந்திக்க நேர்ந்தது. 1859ல் சார்லஸ் டார்வின் பரிணாமக் கொள்கையை முன்வை த்தார். அவருக்கு முன்னரே முழுமையடையாத வடிவங்களில் பரிணாமக் கொள்கை முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுவந்தது. கிறீத்துவ பாதிரி யார் கிரெகர் மென்டேல் மரபணு அறிவியலின் முன்னோடியாக கருதப்படுகிறார். டார்வினின் முன்னோடி லமார்க் ஒரு கத்தோலிக்கர். டார்வினின் கொள்கைகள் பிரபலமானபோது  பல படித்த கிறீத்தவர்க ளும் கிறீத்துவ அறிவியல் வல்லுநர்களும் டார்வினை ஆதரித்தனர். அமெரிக்காவில் அசா கிரே(Asa Grey – https://en.wikipedia.org/wiki/Asa_Gray) எனும் கிறீத்துவ தாவரவியலாளர் பரிணாமம் கடவுளின் திட்டம் என்பதை முன்வைத்ததோடில்லாமல் டார்வினின் ‘ஆரிஜின்’ புத்தகத்தை அமெரிக்காவில் பதிப்பிக்கும் முயற்சியிலும் இறங்கினார். அதிகாரபூர்வமாக ஆங்கிலிக்கன் சபை அதை எதிர்த்தது. அவருக்கு இங்கிலாந்தின் அரசி வழங்கவிருந்த அங்கிகாரத்தை தடுத்தது.. ஆனால் சில பத்தாண்டுகளுக்குள்ளேயே நிலைமை மாறியது. 1884ல் பிரெடெரிக் டெம்பிள் (FrederickTemple – https://en.wikipedia.org/wiki/Frederick_Temple ) ‘மதத்துக்கும் அறிவியலுக்குமான உறவு’ எனும் தலைப்பில் ஆற்றிய பேருரையில் பரிணாமக் கொள்கை கிறீத்துவ நம்பிக்கைக்கு எதிரானதல்ல என்பதை முன்வைத்து பேசினார். 1896ல் அவர் ஆங்கி லிக்கன் சபையின் தலைமை மதகுருவாக நியமிக்கப்பட்டார். டார்வின் இறந்து 126 வருடங்களுக்குப் பிறகு 2008ஆம் ஆண்டு டார்வினிடம் மன்னிப்புக் கோரியது இங்கிலாந்து சபை.

                                                                     கத்தோலிக்கம் மிக மிக மெதுவாகவே எதிர்வினையாற்றியது. நூறு ஆண்டுகளுக்குப் பின் 1950ல் ஹியூமனி ஜெனரிஸ் (Humani Generis ) எனும் தலைப்பிட்ட கடிதத்தில் போப் பன்னி ரண்டாம் பயஸ் மனித உடல் பரிணாமவளர்ச்சியின்படி வருவதென்றும் ஆன்மாவை கடவுள் படைக்கிறார் என்றும் நம்புகையில் கிறீத்துவ நம்பி க்கைக்கும் பரிணாமக் கொள்கைக்கும் முரண்கள் இருக்க முடியாது என அறிவித்தார். மனிதனை வெறும் விலங்காக மட்டும் காணும் அறிவி யலை மதம் ஒருபோதும் ஏற்க முடியாது அல்லவா? டார்வின் தான் தொகுத்தெழுதிய உண்மையின் கனத்தை நன்குணர்ந்திருந்தார். அதை முற்றிலும் புரிந்துகொள்ள சிரமப்பட்டார். அவர் மனதின் ஆழத்தில் ஒரு முழுமையின்மை எஞ்சி நின்றது ‘இந்தக் கொள்கை மனித மனம் சென்றடைய முடியாத அளவுக்கு ஆழமானது. (அதை முழுதாய் புரிந்து கொள்வது) ஒரு நாய் நியூட்டனின் மூளையை யூகிப்பதுபோன்ற செயல் அது.’ என்றார் அவர். அந்த வெற்றிடத்தை மதம் நிரப்பியிருக்கக்கூடும்.

                                                                  இன்றைய அறிவியலை எதிர்கொள்ளும் கிறீத்துவம் அடிப்படையில் இரு வகையானது. ஒன்று நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொண்டு அவற்றின் வழியே இறையியலை யும் ஆன்மிகத்தையும் புதுப்பித்துக்கொள்ளும் அமைப்பு. இவற்றில் சிறந்த உதாரணமாக கத்தோலிக்க கிறீத்துவத்தை சுட்டிக்காட்ட முடியும். மேற்சொன்ன பல வரலாற்று உதாரணங்களிலும் திருச்சபை அறிவி யலை உள்வாங்கும் ஒரு அமைப்பாக மட்டும் இல்லாமல் புதிய அறிவுத்து றைகளை உருவாக்கிய அமைப்பாகவே இருந்துள்ளது என்பது தெளி வாகும். இன்றும் அதே பணி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ‘போன்டிஃபிக்கல் அக்காடமி ஆஃப் சயின்ஸ்’ (The Pontifical Academy of Sciences) அதற்கான நேரடி உதாரணம். 

                                       ஸ்டிபன் ஹாக்கிங் (Stephen Hawking) போன்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அறிவியல் நிறுவனம் வத்திக்கா னின் நேரடி முதலீட்டிலும் பிற நன்கொடைகளின் மூலமும் செயல்படு கிறது. அதன் தலைவரை போப் முன்மொழிகிறார். 1603ல் உலகிலேயே முதன்முதலில் முற்றிலும் நவீன அறிவியலுக்கென்று மட்டுமே நிறுவப்ப ட்ட Academy of the Lynxesன் வழியொட்டி பின் வந்த பல்வேறு போப்புகளால் புனரமைப்பு செய்யப்பட்டு 1936 முதல் சீராக இயங்கிவருகிறது. அதன் இன்றைய தலைவர், நோபல்பரிசுபெற்ற வெர்னர் ஆர்பர் (Werner Arber) கத்தோலிக்கமல்லாத ‘பிரிவினை கிறீத்துவ’ சபையை சார்ந்தவர். அதன் முக்கிய உறுப்பினர்களாக இந்துக்களும், இஸ்லாமியர்களும், யூதர்களும் உட்பட பல மதத்தினரும், நோபல் பரிசு பெற்ற அறிவியல் வல்லுனர்க ளும் உள்ளனர்.
                                      தூய அறிவியல் ஆய்வுக்காகச் செயல்படும் வேறெந்த மதசார்பற்ற அமைப்புகளையும் போலவே போப்பின் அறிவியல் அக்கா டமியும் செயல்படுகிறது. இதைப்போல வத்திக்கான் விண்ணாய்வ கத்தையும் (Vatican Observatory) சொல்லலாம். அதன் தலைவர் பிரதர். கீ கொன்சால்மங்கோ (Guy Consolmagno) ஒரு ஏசு சபை துறவியும் 2014க்கான கார்ல் சாகன் விருதுபெற்றவருமாவார். இன்றைய அறிவியக்கத்தில் தூய அறிவியல் ஆராய்ச்சிக்க்த் தன்னை அர்ப்பணித்திருக்கும் வேறொரு மத அமைப்பை காண்பது அரிது.

                                                                  இன்னொருபுறம் கத்தோலிக்கம் உட்பட்ட கிறீத்துவ சபைகளின் உறுப்பினர்கள் பலரும் பல கிறீத்துவ சபைகளும் இன்றும் பைபிள் முழுமுற்றாக உண்மையானது எபதை நம்பி வருகின்ற னர். அமெரிக்காவில் இவர்கள் ஒரு இயக்கமாகவே செயல்படுகின்றனர். படைப்புவாதத்தை (Creationism) பரிணாமக் கொள்கைக்கு மாற்றாக இவர்கள் முன்வைக்கிறார்கள். புவி வெப்பமாதலை (Global Warming) அறி வியல் அல்ல என மறுக்கிறார்கள், பூமி சுமார் ஆறாயிரம் வருடங்களுக்கு முன்பு பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல படைக்கப்பட்டது என நம்புகிறார்கள், சில கிறீத்துவ சபைகள் நவீன மருத்துவத்தையே மறு க்கிறார்கள். உயிர்போகும் நிலையில்கூட மருத்துவத்தை இவர்கள் நாடுவதில்லை. இதுவும் கிறீத்துவத்தின் இன்னொரு முகமே. 

                                    நிரூபணவாத அறிவியல் கண்டிருக்கும் உச்சங்களை கணக்கில் கொண்டால் இவை அனைத்துமே மூட நம்பிக்கைகள் என்றே வரையறுக்க முடியும். ஆயினும் இவர்கள் அரசியல் மற்றும் பணபலம் கொண்ட அமைப்புகளாக இருப்பதால் இவர்களும் ஒரு தவிர்க்கமுடியாத தரப்பாக இருந்துவருகின்றனர். கிறீத்துவ இறையியலின் பிதாமக ன்களில் ஒருவரான அகஸ்டின் நான்காம் நூற்றாண்டிலேயே துவக்க நூலில் (ஜெனஸிஸ்) வரும் படைப்பு கதை உண்மையானதல்ல என குறிப்பிடுகிறார். – அவரின் நோக்கில் கடவுள் அனைத்தையும் ஒரே கணத்தில் உருவாக்கினார்.-

                                          அறச்சிக்கல்கள் கொண்ட ஆய்வுகளை அறிவியல் கைகொள்ளும்போது கிறீத்துவம் அதனுடன் நேரடியாக மோதுகிறது. தன்னை ஒரு அறிவார்ந்த அதேநேரம் அறம் பேணும் ஒரு நிறுவன மாகவும் அது அமைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு மதமாக அது அறத்தை காப்பதையே முதன்மையான பணியாக கொள்ளமுடியும். உதாரணமாய் செயற்கையாக ஆய்வகத்தில் கருத்தரிக்கச்செய்து அதைக் கொன்று குருத்தணுவை அறுவடை செய்யும் ஆய்வுகளை கிறீத்துவம் கடுமையாக எதிர்க்கிறது. அதே சமயம் பிற அறவழிகளில் செய்யப்படும் குருத்தணு ஆய்வுகளை கிறீத்துவம் கொள்கை ரீதியாக ஆதரிப்பது மட்டுமல்ல அதற்கு பண உதவியும் செய்துள்ளது. 

                                                  பெண்ணின் முட்டையும் ஆணின் விந்தணுவும் சேர்கையிலேயே ஒரு மனித உயிரும் ஆன்மாவும் உருவாகிவிடுகிறது என்பதை கிறீத்துவம் நம்புகிறது. ஒரு மனித கருத்தரிப்பு எப்போது நடக்கிறது என்பதில் அறிவியலும் இதையே நம்புகிறது. எனவே ஆய்வ கத்திலே உருவானாலும் அக்கரு மானுட இனத்தின் ஒரு பிரதிநிதி என்றே அதைக் காண்கிறது கிறீத்துவம். இதே காரணத்திற்காக கருக்கலைப்பும் தீவிரமாக எதிர்க்கப்படுகிறது. கருத்தடைகூட அறம் சார்ந்த காரணங்க ளுக்காகவே கிறீத்துவத்தால் மறுக்கப்படுகிறது. மிகக் குறைந்த விலக ல்களே கருக்கலைப்பிற்க்கு வழங்கப்படுகிறது.  அறிவியலை ஆதரிப்ப தற்கும் இவற்றிற்கும் தொடர்பில்லை. உதாரணமாய் இந்தியாவில் குழந்தை ஆணா பெண்ணா என்று அறிவதை அரசு தடை செய்துள்ளது. இது ஒரு அறம் சார்ந்த சட்டம். அது அறிவியலுக்குப் புறம்பானதல்ல மாறாக கருவின், குழந்தையின் உரிமையை பாதுகாக்கும் அறம் சார்ந்தது.

                                                     கிறீத்துவத்திற்கு இன்னொரு பக்கமும் உண்டு, அது வெறும் வழிபாட்டு மதமாக மட்டுமே இயங்கும் தன்மையும் கொண்டது. பரவலாக அறிவியல் சூழல் இல்லாத சமூகங்களில் செயல்படும் கிறீத்துவம் இப்படியானது. சமகால இந்திய கிறீத்துவத்தை இப்படி ஒன்றாக வகையறை செய்ய முடியும். அதன் அறிவுச்செயல்பாடு என்பது கல்வி நிறுவனங்களை நடத்துவதும் சில கலாச்சார ஆய்வுகளை செய்வதிலும் நின்றுவிடுகிறது.

                                                                       ‘இறைநம்பிக்கையும், அறிவும் (Reason) உண்மையை தியானிக்கும் பொருட்டு மனித ஆன்மா உயர்ந்தெழ உதவும் சிறகுகள்’ என போப் இரண்டாம் ஜான் பால் (John Paul II) கூறுகிறார். (Fides et Ratio: On the Relationship Between Faith and Reason) கடவுள்நம்பிக்கை அறிவுக்குப் புறம்பானதாய் இருக்கத் தேவையில்லை மேலும் அறிவியல் மட்டுமே நம் வாழ்வின் எல்லா பக்கங்களையும் நிரப்பிவிடுவதுமில்லை.


                                                     ஷசாம் எனும் ஒரு குறுஞ்செயலி(App) உள்ளது. நீங்கள் ஒரு பாடல் துண்டை அதற்கு போட்டுக் காட்டினால் அது அந்தப் பாடலை அடையாளம் கண்டுகொள்ளும். அப்பாடல் குறித்த எல்லா தக வல்களையும் பாடல் வரிகளையும் உங்களுக்குக் காண்பிக்கும். ஆனால் அந்தச் செயலியால் ஒருபோதும் அந்தப் பாடலை அனுபவிக்கவோ உணரவோ முடியாது. எந்த அழகிய காட்சியையும் படம்பிடிக்கும் ஒரு கருவியால் அதன் ரம்மியத்தை மதிப்பிட முடியாது. கவிதையை ஒரு இயந்திரம் பகுத்தாய்ந்து அதன் பல்வேறு கூறுகளைச் சொல்ல முடியும். அதை அசைபிரிந்த்து அர்த்தம் சொல்லலாம், அதன் வகைமை என்ன என்று கண்டுபிடிக்கலாம். அதன் மொழிபெர்யர்ப்பை, ஏன் அர்த்தத்தைக் கூட சொல்ல லாம் ஆனால் அந்தக் கவிதையை உணர முடியாது. அறிதலும் உணர்தலும் மனிதனுக்கு இரு பெரும் அனுபவங்கள். அறிதலும் உணர்தலும் ஒன்றை ஒன்று நிறைவு செய்கின்றன. அறிவற்ற உணர்தலும் உணர்வற்ற அறிதலும் முழுமையடையாதவை. தன் தாய் யார் என அறிவியலின் துணை கொண்டு ஒரு மனிதன் அறிய முடியும் ஆனால் அதை அவன் உளமாற உணரும்போதே அந்த உண்மை மழுமைபெறுகிறது. 

                                                            மதமும் அறிவியலும் உண்மையைத் தேடும் மனித ஆன்மாவின் இரண்டு சிறகுகளாய் செயல்பட முடியும் என்பது இதை முன்வைத்துதான். மனித உணர்வென்பது வெறும் நரம்புக்கூட்டு த்தொகையின் எதிர்வினைகள் என்று அறிவியல் சொல்லுமானால் அதை இயக்கும் மென்பொருளாக வரலாறும் கலாச்சாரமும், மொழியும், சிந்த னைப்போக்குகளும் உள்ளன என்பதை ஆன்மிகம் கூறும். அவற்றை தொகுக்கவும் நெறிப்படுத்தவும் மதம் செயல்படுகிறது. அறிவியலையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் சாத்தியங்களை கிறீத்துவம் கொண்டி ருந்தாலும் நடைமுறையில் அந்த ஒருங்கிணைவிற்கான ஒரு உலக சக்தியாக அது இன்னும் முழுமையடையவில்லை என்பதே உண்மை.

mandag 15. januar 2018

ஆண்டாள் அருளிச் செல்லும் அருஞ்செய்தி இதுதான்.


தமிழை ஆண்டாள் ( முழு கட்டுரை) - கவிஞர் வைரமுத்து
முழுவதும் படித்துவிட்டு நீங்களே முடிவுக்கு வாருங்கள் ...
மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் - விலங்குகள் - பறவைகள் - தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது.
புறஊதாக் கதிர்களை பூமியில் புகவிடாவண்ணம் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் ஆக்கப்பட்ட ஓசோன்(O3) கூரையைத் திண்மை செய்வதும் இந்த மார்கழிதான்.
மார்கழியின் அதிகாலை மனோகரமானது.
தாயைத் தொட்டுக்கொண்டு குழந்தை உறங்குகிறது;
தாய்ப் பறவையைத் தழுவிக்கொண்டு குஞ்சு உறங்குகிறது;
இலைகளைப் போர்த்துக்கொண்டு மரம் உறங்குகிறது;
கரைகளை முட்டிக்கொண்டு குளம் உறங்குகிறது.
தன்னைத்தானே கட்டிக்கொண்டு முதுமை உறங்குகிறது.
"இன்னுமா உறக்கம்!
எல்லே இளங்கிளியே!
எழுந்து வா வெளியே' என்று ஆண்டாளின் ஆசைக்குரல் அப்போது ஆணையிடுகிறது.
"மார்கழி நீராட வாரீரோ மங்கையரே' என்று அது எல்லாக் கதவுகளையும் எட்டித் தட்டுகிறது.
அதிகாலை எழுவதே வாழ்வியல் ஒழுக்கம்.
இந்த நெடுங்குளிரில் நீராடுவது உடல் வெப்பத்துக்கும் மனத் திட்பத்துக்கும் ஆண்டாள் நிகழ்த்தும் அமிலச் சோதனை.
இந்த அதிகாலை ஒழுக்கத்திற்குப் பாவை நோன்பு என்பது சடங்கு; கண்ணன் என்பதொரு காரணம்.
பாகவதத்தில் சொல்லப்படும் கார்த்தியாயினி நோன்புக்கும், ஆண்டாளின் திருப்பாவை நோன்புக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு.
கண்ணனே கணவனாய் அமைய நோற்பது கார்த்தியாயினி நோன்பு. நல்லதோர் கணவனை அடைய நோற்பது மட்டுமே திருப்பாவை நோன்பு.
"எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க' என்பதே நோன்பு. ஆனால் நாங்கள் நலம்காண வேண்டும் என்ற தன்னலம் தாண்டி, நாடு நலம்காண வேண்டும் என்ற பொதுப்பண்பில் இயங்குவதுதான் நோன்பின் மாண்பு.
"நாங்கள்நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்,
திங்கள் மும்மாரி பெய்யும்;
நெல்லோடு கயல் உகளும்; பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுக்கும்;
வள்ளல் பெரும்பசுக்கள் வாங்கக் குடம் நிறைக்கும்,
ஆதலால் - மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்'
- இப்படி உயிரியல் - வாழ்வியல் - சமூகவியல் என்ற மூன்றையும் முன்னிறுத்துவதாகப் பாவை நோன்பு பார்க்கப்படுகிறது.
வைணவத்தின் வளர்ச்சியில் திருப்பாவை செல்வாக்குற்றது
அல்லது
திருப்பாவை செல்வாக்குற்றதில் வைணவம் வளர்ந்தது.
தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றில் ஆறாம் - ஏழாம் நூற்றாண்டுகளைப் போகிற போக்கில் புறந்தள்ளிவிட முடியாது.
இயற்கையோடு இயைந்த தமிழர் வாழ்வு அந்த நூற்றாண்டுகளில்தான் இறையோடு இழைந்தது.
அறம்பற்றி நடந்த தமிழர் இறைபற்றி நடக்கத் தலைப்பட்டதும் இந்த நூற்றாண்டிலேதான்.
சமண - பௌத்த மதங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு வைதிக மதம் தன் கட்டுக்களைச் சற்றே கழற்றத் தொடங்கியது.
கடவுள் இல்லாமலும் மதங்களுண்டு. ஆனால் மனிதர்கள் இல்லாமல் மதங்கள் இல்லை என்ற "மெய்ஞ்ஞானம்' வாய்க்கப்பெற்ற பிறகு தன் இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டு மக்களை நோக்கி இறங்கி வந்தது.
யாகம் - யக்ஞம் - தவம் - வேள்வி - விரதம் என்ற கடுநெறிகளைக் கழற்றி எறிந்துவிட்டுக் கடவுளின் நற்குணங்கள் என்று கருதப்பட்ட வாத்சல்யம் - காருண்யம் - சௌலப்பியம் முதலியவற்றை முன்னிறுத்தியே முக்தியுற முடியும் என்ற புதிய சலுகை மக்களிடம் போதிக்கப்பட்டது.
எல்லாச் சாதியார்க்கும் மதம் தேவைப்பட்டதோ இல்லையோ எல்லாச் சாதியரும் மதத்திற்குத் தேவைப்பட்டார்கள்.
எந்த மதம் சாதிய அடுக்குகளைக் கெட்டிப்படுத்தியதோ அதே மதம் கொண்டு அதை உடைத்தெறியவும் சிந்தித்தார்கள்.
"இறை நேயம் என்பதே சாதி என்னும் மம்மர் அறுக்கும் மருந்து' என்று நாயன்மார்களைப் போலவே ஆழ்வார்களும் நம்பினார்கள்.
"இழிகுலத்தவர்களேனும் எம்மடியார்கள் ஆகின் தொழுமின் கொடுமின் கொண்மின்' -என்று தொண்டரடிப் பொடியாழ்வார் சாதிபேதம் ஒழிந்ததென்று சங்கூதினார்.
வர்க்கபேதம் ஒழியாமல் சாதிபேதம் ஒழியாது என்ற பிற்காலப் பேரறிவை அவர்கள் அக்காலத்தில் பெற்றிருக்கவில்லை.
இறைவன்முன் எல்லாரும் சமம் என்னும் குறுகிய பரவசம் ஒன்றே அவர்களைக் கூட்டுவித்தது;
கொண்டு செலுத்தியது.
வைணவம் என்னும் திருமாலியம் தமிழர்க்குப் புதியதன்று.
"மாயோன் மேய காடுறை உலகமும்' என்ற வரையறை தொல்காப்பியத்திலே சுட்டப்பெறுகிறது.
கண்ணன் பலராமன் என்ற தொன்மங்கள் புறநானூற்றிலேயே புழங்கி வந்திருக்கின்றன.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும்,
பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்த காட்சி கண்ட காரிக்கண்ணனார் -
பால்நிற உருவிற் பனைக்கொடி யோனும்
நீல்நிற உருவின் நேமியோனுமென்று
இருபெருந் தெய்வமும்
உடன்நின் றாங்கு
உருகெழு தோற்றம் (புறம் 58)
- என்று பாடுகிறார்.
கண்ணனும் பலராமனும் இணைந்திருந்த தோற்றம்போல் சோழனையும் பாண்டியனையும் காட்சிப்படுத்துகிற காரிக்கண்ணனார், தெளிந்த சொல்லாட்சியில்
"தெய்வம்' என்கிறார்.
சங்க இலக்கியத்தில் தெய்வமென்று கொண்டாடப்பட்டவர்கள் ஏழாம் நூற்றாண்டில் கடவுள் உயரத்தில் காட்சி தருகிறார்கள்.
தெய்வம் - கடவுள் என்ற இரண்டுக்கும் ஒரு நுட்பமான வேறுபாடுண்டு. தெய்வம் என்பது பழம்பொருள்;
பழகிய பொருள்.
கடவுள் என்பது பரம்பொருள்;
பழகாத பொருள்.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் தெய்வத்துள் வைக்கப்படலாம்'. தெய்வம் என்பது வழித்துணைப் பொருள்;
கடவுள் என்பது வழிபடுபொருள்.
அது எட்ட முடியாதது.
எல்லார்க்கும் வாய்க்காதது.
அந்த எட்ட முடியாத கடவுளையும் எட்டமுடியும்;
கணவனாகவே கைத்தலம் பற்ற முடியும்.
இடையறாது நினைந்து காதலுற்றுக் கனிவதொன்றே கடவுளை எட்டும் வழி என்று குறியீட்டு முறையில் சொன்ன கோட்பாடுதான் ஆண்டாள் என்று எண்ணத் தோன்றுகிறது.
பிறப்பு முதல் சீரங்கத்து மாயனோடு மாயமான நாள் வரையிலான ஆண்டாளின் வாழ்வில் உயிருள்ள சில கேள்விகள் ஊடாடுகின்றன.
ஆண்டாள் ஒன்றும் பெரியாழ்வார் பெற்ற பெண் அல்லள். திருவில்லிபுத்தூர் நந்தவனத்தில் திருத்துழாய்ப் பாத்தியில் கண்டெடுக்கப்பட்ட கனகம் அவள். ஆயின் அவள் பெற்றோர் யாவர்? அக்கால வழக்கப்படி அவள் எக்குலம் சார்ந்தவள்?
அடுத்த வினா. ஆண்டாள் வாழ்ந்த காலம் என்பது யாது?
குரு பரம்பரைக் குறிப்புகள் கொண்டு கி.பி 776 என்று கணிக்கிறார் சாமிக்கண்ணுப்பிள்ளை.
"வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று' என்ற திருப்பாவை வரிகொண்டு
கி.பி 731 டிசம்பர் 18 என்று கணிக்கிறார்கள் வானூல் அறிஞர்கள்.
ஆழ்வார்களின் காலம் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 8ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை என்று வரையறுத்த மு.ராகவையங்காரின் கூற்று மெய்யாயின் ஆண்டாளின் காலம் 8ஆம் நூற்றாண்டின் மையம் என்று கொள்வதில் ஐயம் இல்லை.
பெண், வீட்டுப்பொருளாகவும் வீட்டுக்குள் ஒரு பூட்டுப்பொருளாகவும் கருதப்பட்ட 8ஆம் நூற்றாண்டில், பெருமாள் சந்நிதியின் பாட்டுப் பொருளாய் ஆண்டாள் என்றொருத்தி ஆக்கமுற்றதெப்படி?
மரபுகளின் மீதான அத்துமீறல் ஆண்டாள் வாழ்வில் அடிக்கடி நேர்கிறது.
பெருமாள் திருப்பெயரைப் பெரியாழ்வார் பாடக் கேட்டுக் கேட்டு வளர்ந்த பெண்பிள்ளை பெருமானுக்குப் பிச்சி ஆகிறாள்;
தெய்வக் காதலில் திளைக்கிறாள்.
தன் உடலென்ற அழகும் உயிரென்ற பொருளும் கண்ணனுக்கு மட்டுமே காணிக்கை என்று கருதுகிறாள். வடபெருங்கோயிலான் ஆகிய வடபத்ரசாயிக்குப் பெரியாழ்வார் தொடுத்துவைத்த துய்ய மலர் மாலைகளைத் தனக்குத்தானே சூடிச்சூடிச் சுகப்படுகிறாள். பெரியாழ்வார் திகைக்கிறார்.
அவர் தேகத் திசுக்கள் தனித்தனியே துடிக்கின்றன.
எல்லை மீறிய செயல் இதுவென்று உள்ளம் உடைகிறார்.
அன்றிரவு அவர் கனவில் தோன்றிய கண்ணக்கடவுள்
"அவள் சூடிக்கொடுத்த மாலைகளைச் சூடுவதே சுகம்' என்று சொல்லி மறைகிறார்.
கோதையின் பெருமை கண்டு பித்துப்பிடித்து நிற்கிறார் பெரியாழ்வார்.
மகள் மங்கைப் பருவமுறுகிறாள். எடுத்து வளர்த்த பிறை பாற்கடல் குளித்தெழுந்து பௌர்ணமியாய் நிற்கிறது.
மகளுக்கு மணாளன் தேட எத்தனிக்கும்போதுதான் இன்னோர் எதிர்வினை நிகழ்கிறது.
"மானிடன் ஒருவனுக்கு வாழ்க்கைப்படுவதா? மாட்டேன் தந்தையே!'
என்று நீட்டோலை வாசிக்கிறாள் கிடந்த திருக்கோலத்தின்மீது படர்ந்த நெஞ்சினள்.
"உன்னித்தெழுந்தவென் தடமுலைகள் மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என்கிறாள். "மாலிருஞ்சோலை
எம் மாயற்கல்லால் மற்றொருவர்க் கென்னைப் பேசலொட்டேன்'
என்று உறுதி உரைக்கிறாள்.
தமிழ்ப்பரப்பில் முன்னெங்கும் கேளாத இப்பெண்மொழி முதன்முதலாய்ப் பெரியாழ்வார் பெண்ணால் பேசப்படுகிறது.
இப்படி ஒரு விடுதலைக்குரல் எப்படிச் சாத்தியம்? இந்த உறுதியும் உணர்ச்சியும் எதற்கான முன்னோட்டம்?
ஆழ்வார்கள் பன்னிருவருள் பதினொருவர் ஆணாழ்வார்கள். இவளொருத்தி மட்டுமே பெண்ணாழ்வார்.
ஆனால் மொழியின் குழைவிலும், தமிழின் அழகிலும், உணர்ச்சியின் நெகிழ்விலும்,
உரிமையின் தொனியிலும் ஆணாழ்வார்களை விடவும், பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள் முந்தி நிற்கிறாளே! யாது காரணம்?
"தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே'
என்ற குலசேகர ஆழ்வார் குரலில்,
ஒரு பக்தனின் முக்தி வேட்கை மட்டுமே முன்னுரிமை பெறுகிறது.
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்
என்ற பூதத்தாழ்வார் பாசுரத்தில் ஒரு தொண்டுள்ளத்தின் உருக்கமே தூக்கலாய் நிற்கிறது.
வண்டூர் உறையும் பெருமாளுக்குக் குருகினங்களைத் தூதுவிடும் நம்மாழ்வாரின் நாயகன் நாயகி பாவத்தில் உண்மையைத் தாண்டி உணர்ச்சி வினைப்படவில்லை. திடீரென்று வைணவத்துக்கு மாறியவர் திருநீறு குழைத்துத் திருமண் இட்டுக்கொண்டதுபோல் உணர்ச்சியின் பிரவாகம் யாப்புக்குள் தடுக்கி விழுகிறது.
ஆனால் ஆண்டாள் உணர்ச்சி என்பது வெள்ளம்;
மலை உச்சியிலிருந்து பள்ளம் தேடித் தாவும் வெள்ளம்.
அது கட்டற்ற காட்டாறு.
இதனால்தான் வைணவ ஆச்சாரியார்கள்
"ஆழ்வார்களின் பக்திநெறி மேட்டுமடை ஒக்கும்;
ஆண்டாளுடையதோ பள்ளத்துமடை ஒக்கும்'
என்று திளைத்துத் தெளிந்து தெரிவிக்கிறார்கள்.
ஆழ்வார் பாசுரமோ பெரும்பாலும் ஆற்றுப்படுத்துவது. ஆண்டாளுடையதோ ஐக்கியப்படுவது. ஆழ்வார் பாசுரங்களோ அடிமையுறுவதில் ஆனந்தம் காண்பன. ஆண்டாள் பாசுரங்களோ விடுதலைக் குரலின் வீச்சுடையன.
ஒருத்தியால் பாடப்பெற்றதென்றாலும் திருப்பாவைக்கும் நாச்சியார் திருமொழிக்கும் அடிப்படை வேறுபாடு ஒன்றுண்டு.
நாச்சியார் திருமொழி காதல் லயத்தில் கனன்ற பாடல்கள்.
அவை பெரும்பாலும் தன்னுணர்ச்சியில் விளைந்தவை. திருப்பாவையோ யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் பொது உணர்ச்சியில் பூத்தவை.
"மல்லாண்ட திண்டோள் மணிவண்ணனுக்கென்றே சில்லாண்டு வளர்ந்த செல்வி கண்ணனையே கணவனாய் வரிப்பேன்'
என்று கனவு கண்டாள்.
"அவரைப் பிராயம் தொட்டு ஆர்த்தெழுந்த தடமுலைகள் துவரைப் பிரானுக்கே' என்று காதல் வஞ்சினம் கண்டாள்.
அவன் தோள்சேர என்ன வழி என்று எண்ணிக்கிடந்தவள் ஆயர்மங்கையர் கைக்கொள்ளும் பாவை நோன்புற்றாள். அவளுக்குத் திருவில்லிபுத்தூரே ஆயர்பாடி ஆயிற்று.
தன்னையும் தம் தோழியரையும் ஆயர் பாவையர் ஆக்கினள். வடபெருங்கோயிலான் திருக்கோயிலே நந்தகோபன் குடிலாயிற்று.
கல்லான கடவுளே கண்ணனாகினான். அகமும் புறமும் தம்மைத் தாமே தகவமைத்துக்கொள்ளக் கடவுளை ஓர் ஊடகமாய்க் கைக்கொள்கிறார்கள் ஆயர்குலத்துத் தாயர்கொழுந்துகள்.
"நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலே நீராடி மையிட் டெழுதோம்; மலரிட்டுநாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்;
தீக்குறளை சென்றோதோம்'
-என்று பெண்மைக்கெல்லாம் பொதுவாகத் தன்மைப் பன்மையில் பாடிக்கொள்கிறாள்.
ஆனால் திருப்பாவையின் 19ஆம் பாட்டிலும் நாச்சியார் திருமொழியிலும் பெண்மைக்கென்று அந்நாளில் இட்டுவைத்த கொடுங்கோடுகளை ஆண்டாள் தாண்டியதெங்ஙனம்?
கன்னி கழியாத ஒரு பெண்ணின் பாலியல் உரையாடலுக்கு எது அடிகோலியது?
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்
என்ற சொல் விடுதலை ஆண்டாளுக்கு அருளப்பட்டதா அல்லது அகவெழுச்சியின் அத்து மீறலா?
உரைகாரர்கள் இதற்கு வேறுபொருள் கூட்டித் தம் தீராப்புலமையின் திமிர் காட்டுவார்கள்.
"குத்துவிளக்கு என்பது குரு உபதேசம். கோட்டுக்கால் என்பன நான்கு புருஷார்த்தங்கள்.
மெத்தென்ற பஞ்சசயனமாவது
தேவ, திர்யக், மனுஷ்ய, ஸ்தாவர, அப்ராண ரூபமான ஜீவர்கள்.
மேலேறி என்பது இவ்வுயிர்களுக்கு மேம்பட்டவன்'
என்று பிரபந்த ரட்சையில் வைணவாச்சாரியார்கள் வலிந்து விதந்தோதினாலும் அதை நயம் பாராட்டல் என்று சொல்லவியலுமே தவிர நியாயம் பாராட்டல் என்று சொல்லவியலாது.
இதற்கு நேர்பொருளே ஏற்புடைத்து.
கோட்டுக்கால் என்பது யானைத் தந்தத்தால் நிறுத்திய கட்டில்கால். பஞ்ச சயனம் என்பது
அன்னத்தூவி, இலவம்பஞ்சு, செம்பஞ்சு, வெண்பஞ்சு, மயிற்றூவி என்ற ஐந்தும். தான் வாய் வைக்கும் இடம் இந்த ஐந்தும் கடந்த மேன்மை கொண்டதாய்த் திகழ வேண்டுமென்று அந்த ஆறாம் பொருளைக் கண்ணன் கண்டடைகிறான் என்று கொள்வது கவிதை நயம்.
"மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றக்' கனாக்காணும் கோதையாள் பாசுரத்தில் தமிழ் வெட்கமறுத்து விளையாடுகிறது. கொழுந்தமிழும் - செழுந்தமிழும், பழந்தமிழும் - இளந்தமிழும் வசந்த காலக் கிளைகளில் கொழுந்தெழுந்து வருவதுபோல் குழைந்தெழுந்து வருகின்றன.
மறுபடியும் ஒருபடி மேலேறுகிறாள் ஆண்டாள்.
கண்ணனின் வாய்ச்சுவையை அறிய விழைகிறாள்.
எவரிடம் கேட்பது?
அவனோடு உறவாடிய உயர்திணைப் பெண்கள் உண்மை சொல்லார்.
ஆகவே அவன் இதழோடு உறவாடிய அஃறிணைப் பொருள் ஒன்றை அவாவுகிறாள்.
அதுதான் அவன் ஊதுகின்ற வெண்சங்காகிய பாஞ்ச சன்யம்.
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே
ஆண்டாள் பாடல்களின் உச்சம் என்று சொல்லலாம் இந்தப் பரவசப் பாசுரத்தை.
கண்ணன் வாய்வைத்த சங்கே சொல்! அவன் இதழில் கற்பூரம் மணக்குமா? தாமரையின் வாசம் வருமா? இனிக்குமா? அதன் சுவையென்ன? மணமென்ன? என்பது பொருள்.
"சங்கே நீ உப்புக்கடலில் பிறந்தாய். இனிக்கும் இடம் கிட்டிற்று உனக்கு. திருத்துழாய்ப் பாத்தியில் மணத்தோடு பிறந்தவள் நான்.
எனக்கேன் இக்கண்ணீர் உப்பு?' என்ற உள்ளார்ந்த தமிழ் நயம் இதில் ஊடாடிக் கிடக்கிறது.
ஆண்டாள் இறைத்த நீர் கண்ணன் என்ற கழனி சேர்வதற்கு முன்னால் தமிழ் என்ற வாழையைத் தழைக்க வைத்திருக்கிறது.
"காதலுற்ற செய்தியினை மாதர் உரைத்தல் வழக்கமில்லை' என்ற மரபு சங்க இலக்கியத்திலேயே மீறப்பட்டிருக்கிறது.
"என் உயவுநோய் அறியாது இந்த ஊர் துஞ்சுகிறதே என் செய்குவேன்? முட்டிக்கொள்ளவோ எவரையேனும் தாக்கவோ வாய்விட்டுக் கதறவோ' என்ற பொருளில் இயங்கும் "முட்டுவேன்கொல், தாக்குவேன்கொல்' என்ற ஒளவையார் பாடல் அந்த மரபை உடைத்ததுதான்.
கன்றும் உண்ணாமல் கலத்திலும் சேராமல் பசுவின்பால் நிலத்தினிழிந்து வீணாவதுபோல் எனக்கும் பயன்படாமல் என் தலைவனுக்கும் பயன்படாமல் என் அழகைப் பசலை உண்டு போகிறதே என்ற பொருளில் எழுதப்பட்ட
"கன்று முண்ணாது கலத்தினும் படாது' என்ற வெள்ளிவீதியார் பாடலும் மரபு மீறல்தான்.
ஆனால் மணமான பெண்களின் குரல்களாக அவை கேட்கின்றன. ஆண்டாளுடையது கன்னிக்குரல். அப்போதுதான் பூத்தெழுந்த மலரின் புதுக்குரல்.
"கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்தொருநாள் தங்குமேல் என்னாவி தங்கும்'
என்று பாயிட்டுச் சொல்லும் தனிமொழியை வாய்விட்டுப் பாடிய குரல் ஆண்டாளின் அகக்குரல்.
கனவு காணும் வேளையிலும் கலவிகண்டு விண்டுரைக்கும் துணிச்சலும் சுதந்திரமும் ஆண்டாளுக்கு வாய்த்தது எப்படியென்று ஆய்வுலகம் ஆச்சரியமுறுகிறது.
ஒரு மனிதனோடு எனக்கு மணவினை இல்லை என்று உறுதிப்பட்ட பெண்ணை என்செய்வது என்று பெரியாழ்வார் கலக்கமுற்றபோது, கண்ணன் அவர் கனவில் தோன்றியதாய்ச் சொல்லப்படுகிறது. "ஆழ்வீர்! நின்மகளை யாமே மணக்கிறோம்;
உங்கள் திருச்செல்வியை திருவரங்கம் அழைத்து வாரும்'
என்று பெரியாழ்வார்க்கு ஆணையிட்ட பெருமாள்,
பாண்டிய மன்னன் வல்லப தேவன் கனவிலும் தோன்றித் "திருவில்லிப்புத்தூர் சென்று முத்துச்சிவிகை ஏற்றி ஆண்டாளைத் திருவரங்கம் அழைத்து வாரும்'
என்று ஆணையிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
பல்லியம் முழங்க மறையவர்கூடி வாழ்த்தொலி வழங்க,
போகும் வழியெங்கும் பூச்சிதற, நாற்படையும் ஊர்ந்துவர,
பேரங்கம் முழுக்க அழகுற்ற பெண்ணாள் சீரங்கம் வந்து சேருகிறாள்.
திருவரங்கக் கோயில் புகுந்து,
வளர் தந்தையை வணங்கி வழிபட்டு, காதல் நடைநடந்து ஆதிசேடன் கடந்து, திருமால் திருவடி வருடி அவனோடு கலந்தாள்;
ஐக்கியமுற்றாள்.
இங்கும் சில வினாக்கள் விளைகின்றன.
கடவுள் மனித வடிவில் வந்து மனிதப் பெண்ணை மணந்து போவது உண்டு; வள்ளியும் முருகனும் போல.
மனித வடிவத்திலேயே கடவுள் காதல் உண்டு;
கண்ணனும் ராதையும் போல.
ஆனால் கடவுள் திருவுருவத்தோடு ஒரு மானிடச்சி கலந்தாள் என்பது பூமிதனில் யாங்கணுமே காணாதது.
ஆனால்,
அர்ச்சாவதாரமாகிய விக்கிரகத்தோடு குருதியும் இறைச்சியும் கொண்ட ஒரு மானிடப் பெண் கலந்ததுண்டா என்ற கேள்விக்கு விடைசொல்ல ஓர் ஆவணமும் இருக்கிறது.
"குலசேகரப் பெருமாள் தமது புத்ரி சோழவல்லியை அழகிய மணவாளப் பெருமாளுக்குத் திருமணம் செய்வித்துத் தமது சொத்தை ஸ்ரீதனமாகக் கொடுத்துத் திருமண்டபம் கட்டிய செய்தியும்'
- என்ற குறிப்பு எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் பதிப்பித்த
"கோயிலொழுகு' நூலில் காணப்படுகிறது.
ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்த பெண் இல்லை ஆதலாலும், அவள் பிறப்பு குறித்த ஏதும் பெறப்படாததாலும்,
ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்.
அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்ட
Indian Movement: some aspects of dissent, protest and reform
என்ற நூலில் ஆண்டாள் குறித்து இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது :
Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple.
- பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாடார்கள்.
ஆனால் ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப் பார்ப்பார்கள்.
சமண - பௌத்த சமயங்களின் கடுநெறிகளுக்கு மாறாய்த் துய்ப்பின் கதவுகளைத் திறந்துவிட்ட அக்கால மத நெறிகளின் குறியீடாகத்தான் ஆண்டாளைப் பார்க்கலாம். ஆண்டாளின் பிறப்பு மறைவு இரண்டின் மீதும் விடை அவிழாத வினாக்கள் இருந்தாலும் ஆண்டாளின் தமிழ் நூற்றாண்டுகளின் தாகத்திற்கு அமிர்தமாகின்றது. "எண்ணம் திண்ணியதாயின் எண்ணியதெய்துவாய்' என்ற நிபந்தனையற்ற நம்பிக்கையின் நிதர்சனமாக ஆண்டாளைப் புரிந்துகொள்ளலாம்.
"கண்ணன் புரிந்துகொள்ள முடியாத ஒரு கடவுள் தத்துவம்.
தன் காலத்திற்கு முன்கூட்டியே பிறந்துவிட்டவன் கண்ணன்.
இன்னும் சொல்லப் போனால் மிகமிக முன்கூட்டி. அதனால் அவனைப் புரிந்துகொள்வது வருங்காலத்தின் சாத்தியமே தவிர நிகழ்காலத்தினதன்று'
என்ற ஓஷோவின் கூற்று உண்மையாயின் கண்ணனைப் புரிந்துகொண்ட இறந்த காலத்தின் எதிர்காலம் என்றே ஆண்டாளைச் சொல்லத் தோன்றுகிறது.
ஒன்றையே நினை
- ஒருமுகப்படு
- ஒப்புக்கொடு
- நம்பு
- கருதியதில் உறுதிகொள்
- வினைப்படு
வெற்றியுறு என்ற தத்துவம் ஆண்டாளுக்கும் கண்ணனுக்கும் மட்டும் உரியதன்று.
தலைவனுக்கும் தொண்டனுக்கும், நண்பனுக்கும் நண்பனுக்கும், கணவனுக்கும் மனைவிக்கும், தந்தைக்கும் மகனுக்கும், சத்தியத்திற்கும் வாழ்வுக்கும் இதுவே உரியது.
எட்டாதன எட்டுவதற்கும் கிட்டாதன கிட்டுவதற்கும்,
மனிதகுலத்தின் முதல் மூலதனம் நம்பிக்கை மீது கொள்ளும் நம்பிக்கைதான்.
இறைவனையும் இயற்கை இறந்த நிகழ்வுகளையும், கட்டமைக்கப்பட்ட பிம்பங்களையும் கழித்த பிறகும் ஆண்டாள் அருளிச்
செல்லும் அருஞ்செய்தி இதுதான்.