torsdag 23. oktober 2014

கடல்யோசித்தது..

கடல்யோசித்தது..
(சிறுகதை)

-                                                         செ.டானியல்ஜீவா-

“எனக்கொரு நண்பன் உண்டு, அவன் தனக்கேன வாழாத் தலைவன்”என்ற கிறிஸ்தவப் பாடல் சின்ன வயதிலிருந்து என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.இந்தப் பாடலின் வரியை என் நண்பன் குமாரைக் காணும் போது அவ்வப்போது பாடுவேன். அவன் நான் பாடும் போதெல்லாம் கேலியும் கிண்டலும் செய்வதோடு என்னைப் பார்த்து ‘பன்னாடை பன்னாடை’ என்று திட்டித் தீர்ப்பான்.
 குமாருக்கு  நாற்பத்திரண்டு வயதிருக்கும்.பொது நிறமும்,  உடல் நல்ல கட்டுமானமாகவும், உயரமாகவும் இருப்பான். ரொம்பக் கறாரானவன் போல் தன்னைக் காட்டிக் கொள்வான்.நெஞ்சில் அடர்ந்து கிடக்கும் கறுத்த முடியெல்லாம் வெளியில் தெரியும் படியாக சேர்ட்டின் மேற்ப் பக்கப் பட்டனைத் திறந்து விட்டபடியே என்னோடு எப்போதும் வருவான்.எதிரில் வரும்  பெண்கள் எல்லாம் தனக்காக அலைகிறார்கள் என்று தனக்குள் நினைப்பான்.நினைப்பதோடு மட்டும் நின்று விடமால்  நண்பர்களுக்கெல்லாம் அவன் சொல்லித் திரிவான்.சிலவேளை நெஞ்சை நிமித்தியபடி ஏதோ உலகத்தைப் தலை கீழாக பிரட்டப் போகிறவன் போல் அலைவான். ஆனால் ஒண்டும் உருப்படியாகச் செய்யமாட்டான்.
எனக்கு குமார் நண்பனாகியது, கல்லுரியிற் படித்த கால கட்டதில்தான்.படித்த காலத்தில் தொடங்கிய நட்பு இன்று வரை தொடர்வது பெரிய சாதனையாகவே நான் நினைக்கிறேன். எப்ப என்ன செய்வான் என்று எனக்கு மட்டு மல்ல யாருக்குமே தெரியாது.
சிறுவயதில் பரவைக் கடலில் கட்டப்பட்டுக் கிடந்த வள்ளத்தில் ஏறி விழுந்து போனதால் என்னுடைய ஒற்றைக் காலில் உடைவு ஏற்பட்டு விட்டது.இடது காலை கொஞ்சம்  ‘தென்டித்தென்டித்’தான் நான் நடப்பேன். என்னைச் ‘சொத்தி’ என்று சிலர் கூப்பிடுவார்கள்.இருந்தும் குமார் என்னைச் சொத்திக் காலன் என்று கூப்பிடுவதில் தனிக்  கவனம் எடுப்பான். நான் நல்ல கறுப்பாக இருப்பேன். செயின்ச் சுமோக்கர். பகலில் வேலைக்குப் போகிறதைத் தவிர இரவு முழுதையும் போதையில் கழிப்பேன். நான்கறுப்பாய் பிறந்தேன் என்பதில் ஒரு வகையான தாழ்வு மனப்பான்மை எனக்குள் இருந்து கொண்டேயிருக்கிறது. சினிமாப் பாடலில் மட்டும் ‘கறுப்பு’என்பது அழகென்று சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் அதை அனுபவித்து பார்த்தால் தான் அதன் வலி தெரியும். தலை முடி நன்றாகக் கறுப்பாக இருக்கும். கட்டையாகவும் கறுப்பாகவும் இருந்து தென்டித் தென்டித்  நடப்பதால் அன்றாட வாழ்கையில் மிகுந்த அயர்ச்சியையும் சோர்வையும் உணர்வதுண்டு.
ஒருவருடன் கொஞ்ச நாட்கள் பழகினாலே நான் அவர்களை அடையாளம் கண்டு விடுவேன். பின் அவர்கள் என்னை ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது புறந் தள்ளுகிறார்களா என்பதை நான் எனக்குள் உணர்ந்து கொள்வேன்.அப்படித் தான் குமாரை நான் அடையாளம் கண்டு  கொண்டேன். ஆனால் அவன் என்னை அலட்சியப்படுத்துவதும் பின் தானாகவே என்னோடு  ஒட்டிக் கொள்வதுமாகவே இருந்து வந்தான்.
நான் அவனை முதலில் சந்தித்த போது இலங்கை அரசியல் பற்றியே அவன் கதைத்தது இன்னும் எனக்கு நினைவில் இருக்கின்றது. நான் எப்போதுமே தீவிரமாக அரசியலில் ஈடுபட்டது கிடையாது. அவ்வப்போது அரசியலைக் கூர்ந்து கவனித்து வருவேன் அவ்வளவுதான்.அதற்கு மேல் ஒரு படிகூட மேலே போகமாட்டேன்.ஆனால் அவன் இலங்கை அரசியலை முழுமையாக அறிந்தவன் போல அலட்டிக் கொள்வான். நான் அவனுடைய அலட்டலை அதிகம் காது கொடுத்துக் கேட்பதில்லை.
அவனுடைய அப்பா கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.அப்பா இறந்து ஆறுமாதம் கூட ஆகாத நிலையில் அவனுடைய தாய் அவளிலும் ஐந்து வயது குறைந்த பக்கத்து ஊரைச் சேர்ந்த பொடியனோடு ஒடிப்போய் விட்டாள்.அதன்பின் அவனுடைய வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.அவனுடைய மாமியார் அவனையும் அவனுடைய தங்கையையும் தன் பொறுப்பில் வளர்க்கத் தொடங்கினாள். குமாருடைய கல்லூரிப் படிப்பை அவனுடைய மாமியர் நிறுத்திவிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள புடவைக்கடையில் சேர்த்து விட்டாள்.சில வாரத்திலேயே கடையில் களவெடுத்ததாக அந்தக் கடை முதலாளி வேலையிலிருந்து அவனை நீக்கிவிட்டார்.
இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் புலிகளோடு அடிபட்டுக் கொண்டிருந்த போது, சனங்களெல்லாம்   அகதி முகங்களுக்கு செல்ல,இவனோ இரவோடு இரவாக கூப்பன் கடையை உடைத்து அதற்குள்ளிருந்த பொருட்களையெல்லலாம் எடுத்து விற்றான்.அத பற்றி அவனிடம் கேட்ட போது,அவன் சொன்னான்‘இது அரசாங்கச் சொத்து அதலை எடுத்தன்’ என்றான். இப்படிச் சின்னச் சின்னக் களவென்று நிறையச் செய்தான்.
பொல்பொட், மாவோ, சே,காஸ்ட்ரோ என்ற பெயர்களை அடிக்கடி உச்சரிக்க தொடங்கினான்.கணவனால் கைவிடப்பட்ட இரண்டு குழந்தையின் தாயைக் காதலித்து அவன் திருமணமும் செய்து கொண்டான். அவன் அவளை காதலிக்கிற போது, தான் இயக்கத்தில் இருப்பதாக ஒரு பொய்யைச் சொல்லி வந்தான். அதை அவள் உண்மையாகவே நம்பி விட்டாள்.  யாழ்ப்பாணத்தில் இயக்கம் இருந்த காலத்தில் எப்படி யாழ்ப்பாணத்திலுள்ள பெண்களுக்கு அவர்கள் மீது பரிவும் பயமும் இருந்ததோ அதேபோல் இவளுக்கும் அவன் மீது  இருந்தது.
தன்னை ஒரு இடதுசாரி என்றே சொல்லி வந்தவன், ஆனால் சைவ முறைப்படியே திருமணம் செய்து கொண்டான். திருமணம் நடந்த அன்றிரவே அவன் மனைவி தேவி காதுக்குள் முணு முணுக்கத் தொடங்கினாள். தூங்குவதற்காகப் பாயில் குமார் மல்லாந்து கிடந்த போது அவள் கேட்டாள் ‘ஏதும் ஆயுதம் சட்டைக்கில்ல வைச்சிருக்கிறீயா...?’ அவன் சிரிச்சுக் கொண்டே ‘அடியே விசரி…நான் இயக்கத்துக்கு துண்டு குடுத்து விலகிட்டேன்.மக்கள் போராட்டம் ரொம்ப நாளாகுமாம் அதுவரைக்கும் நான் காத்திருக்கேலாதெண்டு விலகிட்டன். இப்ப என்னட்ட ஒண்டுமில்லை.’ என்று அவன் சொல்ல. ‘நான் நம்ப மாட்டேன்’ என்று அவள் சத்தம் போட அவன் தன்னை நிர்வாணப்படுத்திக் கொண்டான். அதன் பின்னர் தான் அவள் அவனுக்கு அருகில் போனாள்.
வருடம் தவறாது பிள்ளைகளைத் தேவி பெற்றுக் கொண்டேயிருந்தாள் .ஏற்கனவே இருந்த இரண்டு பிள்ளைகளோடு குமாருக்கு இன்னும் மூன்று பிள்ளைகள் பிறந்து மொத்தம் ஐந்தாகியது. குமார் கல்யாணம் கட்டிய நாட்களிலிருந்து எந்தவித வேலைக்கும்போவதில்லை.தேவியோடு  உடன் பிறந்த சகோதரர்கள் நான்குபேர். இருவர் கனடாவில் இருக்கிறார்கள்.ஒருவர் பிரான்சிலும் மற்றவர் ஜேர்மனியிலும் இருக்கிறார்கள். இதைவிட ஊரில்  இரு சகோதரிகள் இருக்கிறார்கள்.வெளிநாட்டில் வாழும் நான்கு சகோதரர்கள் அனுப்பி வைக்கிற வெளிநாட்டுப் பணத்திலேயே குமார் குடும்பம் நடத்தி வந்தான்.
குமார் செய்த சில தவறுகளுக்காக ஒரு நாள் இயக்கம் பிடித்துக் கொண்டு சென்று அடித்ததோடு விட்டு விட்டார்கள். அதன் பிறகு வீட்டிற்கு வெளியில் வராமல் இருந்த குமாரைத் தேவி சமாதானப்படுத்தி வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காகக் கொழும்புக்குக் கூட்டி வந்தாள்.சில நாட்கள் இருவரும் ‘லொட்சில்’ தங்கியிருந்தார்கள்.  குமார்  கனடாவிற்கு போகிற விடயம் தாமதமாகிய காரணத்தால் தேவி குமாரை ‘லொட்சில்’ இருக்க சொல்லிவிட்டு   ஊருக்குத் திரும்பி விட்டாள். அது அவனுக்கு வாய்ப்பாக அமைந்தது.தன்னுடைய வழக்கமான குழப்படியைச் ஆரம்பித்தான் குமார். மாதந்தவறாது குமாருக்கு வெளிநாட்டுப் பணம் வந்து கொண்டிருக்கும் .அந்தப் பணத்தை எப்படியெல்லாமோ  சீரழிச்சான். ஒவ்வொரு நாளும் ஆறுமணிக்குப் பிறகு குடிபோதையிலேயே இருப்பான்.நிறைய நண்பர்கள் அவனோடு நட்பாக இருந்தார்கள்.
றஞ்சினி என்ற யாழ்ப்பாணத்து பெண் வெளிநாடு போவதற்காக் கொழும்பு கொச்சிக்கடை றெட்ணம் றோட்டில் அவர்களுடைய உறவினர் வீட்டில் தங்கியிருந்தாள். அடிக்கடி பக்கத்தலுள்ள கொச்சிக்கடை அந்தோனியார் கோயிலுக்கு முன்னால் இருக்கும் சிவன் கோயிலுக்கு போய் வருவாள். அவளை கோயிலில் சந்தித்த குமார் தான் இன்னும் கல்யாணம் செய்யவில்லையென்றும்,தமிழ்ஈழம் கிடைக்கும் வரை தான் கல்யாணம் செய்வதில்லை என்ற முடிவோடு இருப்பதாகவும் அவளுக்கு சொன்னான். வெளிநாட்டில் இருக்கிற தன்னுடைய அண்ணன்மார் தன்னை எடுக்கப் போவதாகவும் அதற்காகத்தான் கொழும்பில் காத்திருப்பதாகவும் கதை விட்டு இல்லாத பொல்லாத பொய்யெல்லாம் சொல்லி அவளைத் தன் வசப்படுத்தினான். அவளுக்கும் குமாருக்கும் காதல் கசிந்து வழிந்தது. றஞ்சினியும் அவனுடைய கதையை நம்பி அவன் பின்னால் திரிந்தாள். நல்ல சாப்பாடு,  தமிழ்படம், உடுப்புகள், காசு என்று பல்வேறு வகைகளில்அவளை அவன் சந்தோஷப்படுத்தினான்.
றஞ்சினி கோயிலுக்குப் போய் வரும் போது ஒரு தெய்வீகக் களை அவள் முகத்தில் படிந்திருக்கும். பா.ராகவனின் நெற்றியில் கிடக்கும் திருநீற்றின் அளவு போல் அவள் எப்போதும் கோயிலுக்குப் போய் வரும் போது  பூசிக்கொண்டு வருவாள். நல்ல பண்பான குடும்பத்தில் பிறந்து நல்ல பழக்க வழக்கத்துடன் இருந்தவள் எப்படிக் குமாரின் பொய்யான வார்த்தைக்களுக்குள் விழுந்திருப்பாள்?  வெளிநாடு செல்வதற்காக கொழும்பு வரும் பெண்கள் இப்படி எத்ததனையோ பேரால் ஏமாற்றப்பட்டிருக்கலாம் யாருக்கு தெரியப் போகிறது.வெளியில் சொன்னால் வெட்கம் என்பதற்காக சிலர் மறைத்திருக்கலாம்.
ஒரு நாள் பின்னிரவு றஞ்சினியின் வீட்டிற்கு வந்த இலங்கை பொலிஸ் உளவுப் பிரிவைச் சேர்ந்த  இருவர் றஞ்சினியை ஒருவாகனத்தில் ஏற்றிக்கொண்டு போய் விட்டார்கள். குமார்அவளைப் பார்ப்பதற்காக கோயிலில் தேடியலைந்தான்.தொடர்ந்தும் அவள் வரவில்லை என்று தெரிந்த போது அவள் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றான்.அங்கே இருப்பவர்கள் றஞ்சினிக்கு என்ன நடந்தது என்ற தகவலை கவலையோடு விபரமாக அவனுக்குச் சொன்னார்கள்.
அந்த வீட்டிற்கு போய் வந்த நாளின் பின் அவன் நிறையவே குடிக்கத் தொடங்கினான். கவலைப்பட்டான். கண்ணீர் விட்டான்.ஒரு சில வாரத்தில் அவன் இயல்பு நிலைக்கு வந்தான்.அதன் பின்அவளை அடியோடு மறந்து விட்டான்.றஞ்சினி எங்கேயிருக்கிறாள்…? அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்ற எந்த யோசனையோஅல்லது அவளை வெளியே எடுக்க வேண்டுமென்ற எந்தவித முயற்சியோ அவன் எடுக்கவில்லை.
நான் கனடா வந்து இறங்கிய கொஞ்ச நாட்களுக்குள் அவனும் வந்து சேர்ந்து விட்டான். வந்தவுடன் எப்படியோ என்னைத் தேடிப் பிடிச்சு என்னோடு ஒட்டிக் கொண்டான். மார்க்கத்தில் ஒரு தமிழ் குடும்பத்தின் வீட்டில் குமார் வாடகைக்கு ஒரு றூமை எடுத்து தங்கியிருந்தான். அந்த வீட்டாரைப் பற்றி நிறைய முறைப்பாடுகள் எனக்குச் சொல்லுவான். சாப்பாடு கொடுப்பதிலிருந்து தன்னைச் சரியாக கவனிப்பதில்லை வரை வாய் வலிக்காமல் சொல்லிக் கொண்டிருப்பான். ஒருநாள் என்னை தானிருக்கும் வீட்டிற்குக் கூட்டிச் சென்றான். அவனுடைய வீட்டுக்காரர் என்னை வைத்துக் கொண்டே பகிடியாக இவனுடைய திருகுதாளம் பற்றி சொன்னார்கள்.அவன் சிரித்து மழுப்பிக்கொண்டிருந்தான்.ஒன்று மட்டும் எனக்குச் நன்றாகவே விளங்கியது, அவன் வாடகைக் காசு ஒழுங்காக கொடுப்பதில்லையென்று.
குமார் வாடகைக்கு இருக்கும் வீட்டார், பிறப்பால் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். கனடா வந்த பின் ஏதோ காரணத்திற்காக கத்தோலிக்க மதத்தில் சேர்ந்து விட்டார்கள்.  கிறிஸ்தவ அறத்தில், சமயக் கருத்துக்களில் மிகவும் இறுக்கமாக  இருந்தார்கள்.குமாரைப் பாவத்துக்கு இரங்கித்தான் வீட்டில் வைத்திருக்கிறார்கள் போல எனக்குத் தெரிந்தது.
நான் அவனைக் கனடாவில் சந்தித்து மூன்று மாதத்தின் பின் குமாரின் ஸ்பொன்சரில் அவனுடைய மனைவியும் ஐந்து பிள்ளைகளும் இங்கு வந்து விட்டார்கள். தனி அறையில் இருந்த குமார் மூன்று அறை கொண்ட தொடர்மாடிக்கு மாறிவிட்டான்.குடும்பம் வந்தவுடனேயே வெல்வயருக்குப் போய் விட்டான். அவனுக்கு அரசாங்கம் கொடுக்கும் பணம் ஒரளவு போதும். ஆனால் குமாருடைய குளப்படியாலும், செலவுகளாலும் கொடுக்கிற பணம் அவர்கள் குடும்பத்திற்கு போதவில்லை.
தேவி கனடா வந்த பின், யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் எல்லாக் காரியங்களையும் தானாக செய்யப் பழகிக் கொண்டாள்.கிழமை நாட்களில் தன்னுடைய பிள்ளைகளை பாடசாலைக்கு கூட்டிப் போவதும், வருவதுமாக அவளுடைய நாட்கள் கடந்தன.இங்குதான் ஒரு தமிழ்ப்பையனோடு நட்பு ஏற்பட்டது.அடிக்கடி அவள் சந்திப்பதோடு, வீட்டில் குமார் இருக்கும் போதும் அவனோட அவள் கதைத்தாள்.
குமாருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எனக்குப் போன் பண்ணுவான்.அவன் என்னோடு நிறையவே கதைக்க வேண்டுமென்று நினைப்பான்.சில வேளை நேரிலும் வந்து சந்தித்துக் கதைப்பான். அவனுக்கு ஆறுதல் அளிப்பது என்னுடைய வார்த்தைகள்தான் என்று அவன் உணர்ந்திருந்தான். அவனுடைய முறைப்பாடுகளில் முக்கியமானது அவனுடைய மனைவி பற்றியது.அவள் எந்த நேரமும்  தொலைபேசியில் யாரவது ஒருவரோடு கதைத்துக் கொண்டிருப்பது. அது அவனுக்கு அடிப்படையில் பிடிக்கவில்லை . குறிப்பாக ஒரு இளைஞனோடு தொடர்ச்சியாகக் கதைக்கிறாள் என்று எனக்குச் சொல்லி வந்தான். நான் கேட்டு விட்டுச் சிரிப்பேன்.நான் சிரிப்பதைப் பார்த்தால் அவனுடைய மூளிகண்ணைக் கொஞ்சம் அகலமாக விரிச்சுக்கொண்டு கோபமா என்னைப் பார்ப்பான்.அப்படிஅவன் பார்க்கும் போது கண் விழிகள் வெளியில் விழப் போகிறது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு நான் சிரிப்பதை  நிறுத்தி விடுவேன்.
கடும் குளிரோடு காற்று முனகியது.உயிர் குளிரில் மரணித்துக் கிடந்தது. நெருப்பை உடல் முழுவதும் அள்ளிப் பூசினாலும் அந்தக் குளிரைத் தாங்க முடியாது போல் என் உடல் விறைத்துக் கிடந்தது.இந்தக் கடும் குளிருக்குள் தான் நானும், அ.முத்துலிங்கமும், வரனும்,காலம்செல்வமும் தமிழ்நாட்டிலிருந்து  அமெரிக்கா வந்திருந்த ‘தேவிபாரதி’யை சந்தித்துவிட்டு அதிகாலையில்தான் வீடு திரும்பினோம் . வந்தவுடன் நான் குளிக்காமலேயே தூங்கிவிட்டேன்.
அதிகாலை நாலு மணியிருக்கும், தொலை பேசி மணி கிணுகிணுத்தது.யாரு இந்த நேரத்தில் போன் பண்ணுவார்கள்… என்று நினைத்துக் கொண்டு மற்றப் பக்கம் திரும்பிப்படுத்து விட்டேன். மீண்டும் தொலை பேசி மணி அடித்தது. உடல் எங்கும் சோம்பலோடு அச்ச உணர்வு ஊரத் தொடங்கியது. கண்ணைக் கசக்கிக் கொண்டு தொலை பேசியில் விழுந்த இலக்கங்களைப் பார்த்ததும் மனதில் சலிப்பு ஏற்பட்டது.  என்னுடைய நண்பன் குமார்தான்அழைத்தான். ஏன் இந்த நேரத்தில் இவன் எடுக்கிறான் என்று யோசித்துக் கொண்டு தொலை பேசியை எடுக்காமல் மீண்டும் திரும்பி எதிர்ப் புறமாகப் படுத்து விட்டேன். திரும்பத் திரும்பத் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தான். நான் எரிச்சலோடு தொலை பேசியை எடுத்தேன். நான் உடனே எடுக்காதற்கு முதலில் எரிந்து விழுந்தான்.திரும்பிச் சொன்னான்.
“நான் என்ர மனுசியோட பெரிய பிரச்சினைப்பட்டுட்டேன். உன்னோட நிறையக் கதைக்க வேணும் உன்ர வீட்டவரணும்” என்றான்.
“அதுக்கென்ன வாவன்.எப்படியடா வரப் போற..?”என்று நான் கேட்டேன்.
“பஸ்சிலதான்”
“வீட்டு முன் கதவை உள்ளால திறந்து விட்டுட்டு நான் படுக்கிறன்.நீ உள்ள வந்து என்னை எழுப்பாமல் ரீவியை மெதுவாகப் போட்டுக் கொண்டிரு.. நான் நித்திரையால எழும்பின உடனே எல்லாத்தையும் விபர சொல்லு.”என்று சொல்லிவிட்டுத் தொலைபேசியைத் துண்டித்தேன்.
பூட்டியிருந்தகதவை உட்பக்கமாகப் திறந்துவிட்டிட்டு நான் மீண்டும் தூங்கிவிட்டேன்.
நான் பகல் பத்துமணிக்கே படுக்கையிலிருந்து எழுந்தேன். குமார் சோபாவில் தூங்கிக் கொண்டிருந்தான். நான்குளித்து விட்டு வெளியில் போவதற்காக ஆயத்தப்படுத்தினேன்.அவன் என்னுடைய காலடிச் சத்தம் கேட்டு விழித்துவிட்டான்.நான் அவனுக்குப் பக்கத்தில் உட்காந்தேன்.அவன் முகத்தைப் பார்த்ததும் பதற்றமானேன்.
“என்னடா முகத்தில நடந்தது..?”
“என்ர பொஞ்சாதியும் அவட முதல் தாரத்து மூத்த பிள்ளையும் சேர்ந்து அடிச்சுப் போட்டாளுகள்.”
“நீ என்ன செய்தனீ..?”
“வழமை போலவே என்னைக் கணக் கெடுக்காமல் யாரோ பொடியனோடு கதைத்துக் கொண்டிருந்தாள், அதுதான் அடிச்சனான்…. அவளுக்கும் நல்ல காயம் வைச்சிட்டன்.அதுக்குத் தான் அவளுகள் இரண்டு பேரும்  பிச்சுப் பிறாண்டிப் போட்டாளுகள்! என்ன வீட்டிலை இருக்கக் கூடாது எண்டு  என்ர மனுசி  என்னை வெளியில கலைச்சுப் போட்டாள்.நான் ஊருக்குப் போறதுக்கு ரிக்கற் புக் பண்ணிட்டன் இண்டைக்கு பின்னேரம் ஐஞ்சு மணிக்கு பிளைட்..
“ஏன்டா அவசரப்படுகிறாய்?”
“நான் முடிவு செய்து போட்டன் அதை விடு,ஒரு விசயம் உன்னட்டைக் கேக்கிறன் பதில் சொல்லு…!,
 நான் இந்தச் சோபாவில படுத்துக் கிடக்கேக்கில ஒரு கனவு கண்டனான்…கடல் யோசிச்சுக் கொண்டு இருக்குதாம் என்னைச் சுனாமி போல வந்து அழிக்க... இந்தக் கனவின்ர அர்த்த மென்னடா மச்சான்..? “நீ போறனெண்டு முடிவெடுத்திட்ட பிறகு ஏன்ர கண்டமாதிரி பயப்படுற..பயப்படமல் இரு.”
 நான் சிரிச்சுக் கொண்டு “சரி வா கோப்பிக் கடைக்கு போவம்.” என்றேன்.அவன் எந்த மறுப்பும் சொல்லாமல் எழுந்து வந்தான்.
கோப்பிக் கடைக்கு முன்னால் காரை நிறுத்தி விட்டு, இருவரும் நடந்து வந்து கடைக்குள் போவதற்காகக் கதவை நான் திறக்க கண்ணாடிக்குள்ளால் கவுண்டரில் நின்ற ஒரு தமிழ்ப் பெண்ணைக் குமார் கண்டதும் சட்டென  முகத்தை மறைத்துக் கொண்டு என்னுடைய காரை நோக்கி அவன் விரைந்து நடந்தான்.
நான் கோப்பியை அவனுக்கும் சேர்த்து வாங்கிக் கொண்டு வந்து காருக்குள் ஏறினேன். அவன் சிரிச்சுக் கொண்டு என்னைப் பார்த்தான்.’ஏன்டா குமார் அந்தப் பொட்டையை பார்த்தவுடன ஓடி வந்தன்னீ’அவன் புன் சிரிப்போடு‘அவள் தான் என்ர பழைய ரஞ்சினி.கொழும்பில சிறிலங்கன் சீஜடி பிடிச்சுக் கொண்டு போனது என்டு சொன்னன் ஞாபகம் இருக்குதா? என்றான். அது உன்ர பழைய காதலியல்ல..   அவளா    இவள்..? என்று ஏக்கத்தோடு கேட்டேன்.அவன், ம்… என்று இழுத்தான்.   நான் உறைந்து போனேன்.
                                                                    (முற்றும்)
நன்றி; தமிழர் தகவல்,லண்டன்
பொங்கல் சிறுகதைச் சிறப்பிதல்


Ingen kommentarer:

Legg inn en kommentar